அரசியல்

“இந்த கொள்ளைப்போரில் வெல்லப்போவது யார்?” : நடுங்கும் அமைச்சர்கள் - சூடுபிடிக்கும் அ.தி.மு.க பஞ்சாயத்து!

ஏ2 சசிகலா, பெங்களூரு சிறையிலிருந்து விடுதலை ஆகி சென்னை வரவிருக்கும் செய்தி பழனிச்சாமி கூட்டத்தை நடுங்க வைத்துள்ளது!

“இந்த கொள்ளைப்போரில் வெல்லப்போவது யார்?” : நடுங்கும் அமைச்சர்கள் - சூடுபிடிக்கும் அ.தி.மு.க பஞ்சாயத்து!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஏ1 ஜெயலலிதா பெயரை வைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பழனிச்சாமி கூட்டத்துக்கு ஏ2 சசிகலாவின் வருகை, அடிவயிற்றை கலக்க ஆரம்பித்துள்ளது! பல சினிமாக்களில், ‘டான்’ ஒருவன் ஒரு கூட்டத்தை வைத்து கொண்டு நாட்டையே தேட்டைப் போட்டுக் கொண்டிருப்பான்... திடீரென திருப்பு முனைக் காட்சியாக, சஸ்பென்ஸுடன் கூடிய பின்னணி சங்கீதம் இசைக்கும். சிறைச்சாலை ஒன்றின் கதவு திறக்கப்படும். திறந்த உடன் ஒரு கால் மட்டும் சிறைச்சாலைகதவுக்கு வெளியே அடியெடுத்து வைப்பது ‘குளோசப்’ காட்சியாகக் காட்டப்படும்... பின்னணி இசையில் ‘படபட’ வென ‘டிரம்’மும் ‘டிரம்பட்’டும் ஆரவாரமாக ஒலிக்க முழு உருவம் காட்டப்படும்! ‘வாழ்க’ முழக்கங்களோடு ஆளுயர மாலைகள், அவருக்கு சூட்டப்பட்டு ஆட்டப்பாட்டத்துடன் அந்த நபர் வரவேற்கப்படுவார். ஆடிப்பாடி அந்த நபரை வரவேற்பவர்களில் பலர், முதலில் காட்டப்பட்ட ‘டான்’னுடன் இருந்தவர்களாக இருப்பார்கள்.

சிறையிலிருந்து வெளியே வந்தவர், ‘எங்கே அவன் வரவில்லையா’? எனக் கேட்க... ‘அவரு... அவரு’ என ஒருவன் பதில் சொல்லிடத் திணற, அந்த காட்சி ‘கட்’ செய்யப்பட்டு பழைய ‘டானின்’ கூடாரத்தில் அந்த ‘டான்’ நடுங்கியவாறு அமர்ந்திருப்பது காட்டப்படும். அந்த சினிமா காட்சி போல, இப்போது நாட்டு நடப்பும் உள்ளது! ஏ2 சசிகலா, பெங்களூரு சிறையிலிருந்து விடுதலை ஆகி சென்னை வரவிருக்கும் செய்தி பழனிச்சாமி கூட்டத்தை நடுங்க வைத்துள்ளது!

சிறைக்குச் செல்லுமுன் தன்னை சினிமாவில் வருவது போல ‘டானா’க உருவாக்கிய பெரிய ‘டானை’ முற்றிலும் ஒழித்து விடலாம் எனக் கருதி செயல்பட்ட சின்ன ‘டான்’ எப்படி நடுங்குவானோ அதைப் போல நடுங்கத் தொடங்கியுள்ளார் பழனிச்சாமி! நம்பிக்கைக்குரிய நபராக என்றும் இருந்திடுவார் என எண்ணித்தானே சசிகலா அவரை முதல்வராக அறிவித்தார்!

“கூவத்தூர் கூத்தின்போது பவ்யமாக எடுபிடிபோல ஓடி ஓடி ‘சின்னம்மா’ முன் குனிந்த தலை நிமிராது அடக்க ஒடுக்கமாக கொத்தடிமைபோல பவனி வந்த பழனிச்சாமி, தனது முதலமைச்சர் பதவியை காத்துக் கொள்ள, ‘வரம் தந்தவன் தலையிலேயே கை வைத்த’ கதைபோல சசிகலா தலையிலேயே கைவைத்த காட்சிகள் துரோகத்தின் உச்சகட்ட காட்சிகள் அல்லவா? இன்று சசிகலா சிறைவாசம் முடித்து சென்னை திரும்புகிறார் என்றதும் எப்படி எல்லாம் பழனிசாமி பதறிப் போயிருக்கிறார் என்பதை, தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க. நடத்திடும் ஒவ்வொரு செயலும் தத்ரூபமாக படம் பிடித்து காட்டவில்லையா? சசிகலா சிறைக்குச் செல்லுமுன் ஜெயலலிதா சமாதியில் மூன்று முறை கையை ஓங்கியடித்து சபதம் செய்த காட்சிகள், எடப்பாடி கண் முன் ஓட, சிறை மீண்டுவரும் சசிகலா அதே சமாதிக்குச் சென்று ‘துரோகத்தை வேரறுப்பேன், துரோகிகளுக்குப் பாடம் புகட்டுவேன்’- என சபதமிடுவாறே என்ற பயத்தில், திறந்த சமாதியை மூடிவிட்டார்!

அமைச்சர்களை டி.ஜி.பி.யிடம் அனுப்பி, ‘சட்டம் ஒழுங்குக்கு அபாயம் வந்துள்ளது; தடுத்து நிறுத்துங்கள்’ என அபயக்குரல் எழுப்பக் கூறுகிறார். இரவிலே பேட்டி கொடுத்தால் நா குழறிடும் சட்டஅமைச்சருக்கு பகலிலியே பயத்தில் நா குழற ஆரம்பித்து, பத்திரிகையாளர்களிடம் உளற, சந்தேக கேள்வி எழுப்பும் பத்திரிக்கையாளர்களிடம் மேலும் அவரை பதிலளிக்க விடாமல், மற்ற அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் அவரை இழுத்துக் கொண்டு ஓடும் காட்சிகளும், நாடே கண்டு சிரிக்கும் விதத்தில் இருந்த சிறந்த நகைச்சுவை காட்சிகள் அல்லவா?

நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை தான் அமைச்சரவைக்கு தகவல் தரும்! ஆனால் இங்கே சட்ட அமைச்சர் ‘சட்டம் ஒழுங்குக்கு ஆபத்து’ என காவல்துறைக்கு தகவல் தருகிறார்; காவல் துறை அதனை அறியாத அளவுக்கு அத்தனை தூரம் பழனிச்சாமி ஆட்சியில் பாழ்பட்டுப் போய் விட்டதா? அதிலே, உச்சகட்ட காட்சியாக, “ஊரையடித்து கொள்ளையடித்தவர் - சொத்துக்குவிப்பு வழக்கிலே 4 ஆண்டு காலம் சிறையிலிருந்து வெளியே வந்தவர்... இன்று அ.தி.மு.கவுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்...” என செய்தியாளர்களிடம் சட்ட அமைச்சர் சண்முகம் பேச, “சசிகலா தண்டனை பெற்ற அதே வழக்கிலேதானே ஜெயலலிதா தண்டனை பெற்றார். அப்படியானால் அவரும் ஊரையடித்து கொள்ளையடித்தவர் என்கிறீர்களா” என செய்தியாளர்கள் கேட்க, அமைச்சர்கள் துண்டைக்காணோம்; துணியைக் காணோம் எனும் போக்கில் செய்தியாளர் கூட்டத்தை முடித்து ஓடினர்!

சிறையிலிருந்து வெளியே வந்த ‘டானை’ எங்கள் எல்லைக்குள் அனுமதிக்க மாட்டோம் என சின்ன ‘டான்’ போலிசிடம் புகார் அனுப்ப, ‘போலீஸ் என்ன... இராணுவத்திடமே கொடுத்தாலும் பயப்படமாட்டோம்’ என பெரிய ‘டான்’ கூட்டம் கொக்கரிக்க, நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பை உருவாக்கும் நிலையில் தமிழகம் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகளை காண காத்திருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல இந்த நேரத்தில் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் வெளியாகி, தமிழக சுவர்களில் எல்லாம் அந்தப் படத்தின் சுவரொட்டிகள் காட்சியளிக்கின்றன! இந்தக் ‘கொள்ளை’ப் போரில் வெல்லப்போவது யார்? வாரிச் சுருட்டிய ஏ1 கூட்டமா? ஏ2 பெயரைச் சொல்லி வாரிச் சுருட்டும் கூட்டமா?பொறுத்திருந்து பார்ப்போம்!

- சிலந்தி

நன்றி : முரசொலி

banner

Related Stories

Related Stories