ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, “நியாய் திட்டம் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதிசெய்யும் திட்டம். கடந்த 5 ஆண்டுகளில் மோடி இந்தியாவின் டீசலை காலிசெய்துவிட்டு என்ஜினை நிறுத்திவிட்டார். தேசத்தின் பொருளாதாரம் எனும் என்ஜின் செயல்பட காங்கிரஸின் ‘நியாய்’ திட்டம் உறுதுணையாக இருக்கும்.
எல்லோருடைய கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என பொய்யான வாக்குறுதியளித்த மோடி வங்கிக்கணக்கு மட்டுமே தொடங்கச் செய்தார். ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 72,000 ரூபாய் வீதம் 5 ஆண்டுகளில் 3.60 லட்சம் டெபாசிட் செய்வோம்.
நாங்கள் பொய் வாக்குறுதி தரவில்லை. பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசித்துத்தான் இந்தத் திட்டத்தை அறிவித்தோம். ‘நியாய்’ திட்டம் பொருளாதாரத்தை வேகப்படுத்தும். பொருளாதாரத்துக்கு பாதிப்பு இல்லாமல் ஏழைகளின் வருமானம் உயரும்.
பிரதமர் மோடி தனது நெருங்கிய நண்பர்களுக்கு கோடிக்கணக்கில் மோசடியாக பணம் அளித்து உதவியுள்ளார். நாங்கள் ஏழைகளுக்கு மட்டுமே உதவுவோம்.” எனப் பேசியுள்ளார் ராகுல் காந்தி.