தமிழ் வளர்த்த திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகத்திற்கு இன்று நூற்றாண்டு தினம். பல்வேறு புலவர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்களை உருவாக்கி, சங்க இலக்கியங்களை பதிப்பித்து தமிழ்நாடு மற்றும் உலகளாவிய தமிழ்ப் பெருமக்களுக்கு வழங்கி பரப்பி தமிழ்த்தொண்டு செய்த இப்பதிப்பகத்தை பதிப்பகம் என்று சொல்வதை விட ஒரு தமிழியக்கம் என்றுதான் சொல்லவேண்டும்.
தமிழ் இலக்கிய வரலாற்றுலகில் புதிய மறுமலர்ச்சியை உண்டாக்கி, புதுத்தமிழ் முன்னோடிகளை நமக்கு வழங்கி, நம் இனத்தையும் மொழியையும் பெருமைப்படுத்தி ஒரு கலாச்சார புரட்சிக்கு வித்திட்ட இப்பதிப்பகம் இன்று நூற்றாண்டைத் தொட்டு நடை பயிலுகிறது. இத்தனை சிறப்புடைய இப்பதிப்பகத்தின் கடந்தகால பணிகளுக்குப் தனது பாராட்டுகளையும், மேலும் பணிகள் தொடர வாழ்த்துகளையும் முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.