இந்தியாவின் நட்பு நாடு அமெரிக்கா என தெரிவித்து வரும் பிரதமர் மோடியின் ஆட்சியில்தான், இந்தியா மீது 50% வரி விதித்து இந்திய ஏற்றுமதியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது அமெரிக்கா.
ரசியா - உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரசியாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது இந்தியா என குற்றம்சாட்டி, இந்திய பொருட்களுக்கான அமெரிக்க இறக்குமதி வரியை அதிகரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இதுபோன்று, அமெரிக்கா பல நாடுகளுக்கு வரி விதித்து வருகிற வேளையில், வரி விதிப்பிற்கு உள்ளாகும் பிற நாடுகள் பதிலுக்கு அமெரிக்கா மீது வரி விதிப்பை அதிகரித்துள்ளன. எனினும், இந்தியா மட்டும் வரியை குறைக்க முற்பட்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்க பருத்திக்கு விதிக்கப்படும் வரிக்கு விலக்களிக்கவும் ஒன்றிய பா.ஜ.க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டின் திருப்பூரில் தி.மு.க கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி!
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே!
தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள் விதித்துள்ள US Tariff காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது.
குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?
நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவன செய்யுங்கள்! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, VishwaGuru எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்!
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி!” என பதிவிட்டுள்ளார்.