மு.க.ஸ்டாலின்

“இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான்! 2026-ல் Version 2.0 Loading!”- முதலமைச்சர் உரை உள்ளே!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய பதிலுரை.

“இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான்! 2026-ல் Version 2.0 Loading!”- முதலமைச்சர் உரை உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய பதிலுரை,

திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சியமைத்து நான்காவது ஆண்டை நிறைவு செய்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொற்காலம் விரைவில் தொடங்கப் போகிறது.

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று நான் பொறுப்பேற்ற மே 7 ஆம் தேதிக்கு இன்னும் ஏழு நாள்கள்தான் இருக்கிறது. இந்த நேரத்தில், இதுவரை செயல்படுத்தியிருக்கக்கூடிய திட்டங்களால், செய்திருக்கக்கூடிய சாதனைகளால் ஏழாவது முறையும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.

என்னுடைய அறுபது ஆண்டுகால பொது வாழ்க்கையை, ஒரே சொல்லில் குறிப்பிடுகிற மாதிரி, தலைவர் கலைஞர் அவர்கள், “ஸ்டாலின் என்றால் உழைப்பு - உழைப்பு - உழைப்பு” என்று சொன்னார்.

இன்றைக்கு நம்மோடு இருந்திருந்தால், “ஸ்டாலின் என்றால் சாதனை – சாதனை – சாதனை” என்று நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாகச் சொல்லியிருப்பார் என்பதை மிகவும் பணிவாகவே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், தலைவர் கலைஞர் அவர்கள் இப்போது இருந்திருந்தால், என்னவெல்லாம் செய்திருப்பார் என்று யோசித்துத்தான் ஒவ்வொரு நாளும் நான் செயல்படுகிறேன்; திட்டங்களைத் தீட்டுகிறேன்.

தலைவர் கலைஞரின் எண்ணங்கள்தான் இந்த அரசினுடைய செயல்கள். அந்தச் செயல்களால் விளைந்ததுதான் இத்தனை சாதனைகள் என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாகச் சீர்கேட்டால் நிர்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய், கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டு இருந்தது. ஊர்ந்து கொண்டிருந்த இந்த இழிவைப் போக்கி, தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்கள். மக்களுடைய நம்பிக்கைக்கேற்ப தமிழ்நாடு இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் தலைநிமிர்ந்து இருக்கிறது என்பதை நெஞ்சை நிமிர்த்தி இந்த மாமன்றத்தில் துணிச்சலுடன், பெருமையுடன் நான் சொல்லிக் கொள்கிறேன்.

“இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான்! 2026-ல் Version 2.0 Loading!”- முதலமைச்சர் உரை உள்ளே!

இது சாதாரண சாதனை இல்லை; கடும் உழைப்பால் விளைந்த சாதனை; இதுவரை தமிழ்நாடு பார்க்காத சாதனை. இன்னும் சொல்லவேண்டுமென்றால், இந்தியாவிலே எந்த மாநிலமும் செய்யாத சாதனை.

நம்முடைய திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு அடைந்திருக்கக்கூடிய உயரத்தின் அளவை, தமிழ்நாடு செய்திருக்கக்கூடிய சாதனைகளை, மிகவும் அன்போடு, பண்போடு, அடக்கத்தோடு இந்த மாமன்ற உறுப்பினர்களுக்குப் பட்டியலிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவிலே No.1 ஆக தமிழ்நாடு 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றிலே இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்ததில்லை. இதை நான் சொல்லவில்லை. எல்லா வகையிலும் தமிழ்நாட்டிற்கு என்றால் ஓரவஞ்சனையோடு செயல்படும் ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே சொல்லியிருக்கிறது.

நம்முடைய வளர்ச்சி 9.69 விழுக்காடு. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவினுடைய வளர்ச்சி எவ்வளவு தெரியுமா? 6.5 விழுக்காடு! இதுதான் சாதனை! தமிழ்நாட்டினுடைய GSDP 17 இலட்சத்து 23 ஆயிரத்து 698 கோடியாக உயர்ந்திருக்கின்றது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2024-25 ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாய்; தேசிய சராசரி 2 இலட்சத்து 6 ஆயிரம் தான்.

இதுவரை இல்லாத உச்சமாக, 14.65 பில்லியன் டாலர் அளவுக்கு மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு கடந்த 2024-2025 நிதியாண்டில் சாதனை படைத்திருக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒட்டுமொத்த எலக்ட்ரானிக் ஏற்றுமதி அளவில், தமிழ்நாடு மட்டுமே 41.23 விழுக்காடு பங்கு வகிக்கிறது.

அதாவது, கிட்டத்தட்ட பாதி அளவு. கடந்த நான்காண்டுகளில் 5 இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வணிக வரியாக வந்திருப்பதே, நம்முடைய வளர்ச்சிக்கான சான்று. அகில இந்திய அளவில் 50 விழுக்காடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில்தான் அறிவியல் ஆய்வக வசதிகள் இருக்கின்றன.

ஆனால், நம்முடைய தமிழ்நாட்டில் 98.3 விழுக்காடு பள்ளிகளில் இந்த வசதி இருக்கிறது. கல்வித் துறையைப் பொறுத்தவரைக்கும், கடந்த நான்கு ஆண்டுகளில் நம்முடைய அரசு செய்திருக்கக்கூடிய திட்டங்கள் காரணமாக, நம்முடைய நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றலே இல்லை.

இந்திய அளவில் 28.4 விழுக்காடாக இருக்கின்ற உயர்கல்வி சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில் 47 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. அதிகமாக பி.எச்.டி படிக்கிற மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம்.

NIRF Ranking-ல் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில், தமிழ்நாட்டில் இருக்கின்ற 18 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. மிகச் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. தமிழ்நாட்டினுடைய சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறது. இந்தச் சமூக முன்னேற்றக் குறியீட்டில், பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறோம்.

இந்தியா முழுவதும் 11.2 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகிற நிலையில், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் இருப்பவர்கள் 1.43 விழுக்காடுதான். அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தையும் முன்னேற்றுவதற்காகத்தான் தாயுமானவர் திட்டத்தின்மூலம் நம்முடைய திராவிட மாடல் அரசு உழைத்துக் கொண்டிருக்கிறது.

எளிய மக்களையும் மருத்துவச் சேவைகள் சென்று சேர வேண்டுமென்று உருவாக்கி, 2 கோடியே 25 இலட்சம் மக்கள் பயனடைந்திருக்கிற மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஐ.நா. அமைப்பினுடைய விருதைப் பெற்றிருக்கிறது.

நேற்றுகூட ஒரு செய்தி வந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின்படி, தொற்றா நோய்களின் கட்டுப்பாடு குறித்து ICMR நிறுவனம் நடத்திய சர்வேயில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பெருமளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் அரசு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதிகமான MBBS இடங்கள் இருக்கின்ற இடமும் தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலேயும் இல்லாத அளவிற்கு, நம்முடைய அரசு மருத்துவமனைகளில் ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 733 மருத்துவப் படுக்கைகள் இருக்கின்றன.

தொழில் துறையைப் பொறுத்தவரைக்கும், 39 ஆயிரத்து 666 தொழிற்சாலைகளுடன் நாம்தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன். 27 இலட்சத்து 75 ஆயிரம் நபர்கள் பணிபுரிகிறார்கள். 5.35 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகளோடு இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றோம்.

நம்முடைய திராவிட மாடல் அரசின் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களால், தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடிய பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதத்திலே 47 விழுக்காடுடன் இந்தியாவிலேயே நம்பர்-1 ஆக இருக்கின்றோம். காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடம். சூரிய சக்தியில் நான்காவது இடம்! புத்தாக்க நிறுவனங்களை உருவாக்குவதில் Best Performer!

Startup தரவரிசைப் பட்டியலில், 2018-ல் கடைசி இடத்தில் இருந்த நிலையை மாற்றி, 2022 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்திருக்கிறோம். ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் முதல் இடம்! தோல் பொருட்கள் மற்றும்

ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மையான மாநிலம்! எண்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தித் திறனில் முதலிடம்! மக்காச்சோளம் உற்பத்தித் திறனில் இரண்டாம் இடம்! நெல் உற்பத்தித் திறனில் மூன்றாம் இடம்!

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலமாக எடை குறைவான குழந்தைகள் பிறப்பதைக் குறைத்திருக்கிறோம். எடை குறைவாக பிறந்த குழந்தைகளையும் காப்பாற்றியிருக்கிறோம்.

இந்திய நீதி அறிக்கையின்படி, தமிழ்நாட்டில்தான் காவல்துறையில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகம். இப்படி சாதனைக்கு மேல் சாதனையைச் செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு; இந்தச் சாதனைகளையெல்லாம் சாதாரணமாக செய்துவிடவில்லை. மேலே பாம்பு - கீழே நரிகள்; குதித்தால் அகழி - ஓடினால் தடுப்புச் சுவர்கள்.

இதற்கெல்லாம் இடையில் மாட்டிக்கொண்ட மனிதனைப் போல ஒருபக்கம் ஒன்றிய அரசு - மறுபக்கம் ஆளுநர் – இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி என்று தடைகளைக் கடந்து நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இது. இவையெல்லாம் ஸ்டாலின் என்ற தனிமனிதனுடைய சாதனைகள் அல்ல; என்னுடைய அமைச்சரவை, அதிகாரிகள் - அவர்களுடைய கூட்டு உழைப்பிற்குக் கிடைத்த பலன். எல்லாவற்றிலும் என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைப்பவன் இல்லை நான். இது ஒரு கட்சியினுடைய அரசு அல்ல. ஒரு கொள்கையினுடைய அரசு என்று நான் குறிப்பிட்டேன்.

“இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான்! 2026-ல் Version 2.0 Loading!”- முதலமைச்சர் உரை உள்ளே!

அப்படித்தான் செயல்பட்டு வருகிறோம். இதுவரை இருந்த அரசுகளை காமராசர் அரசு – அண்ணா அரசு – கலைஞர் அரசு – எம்.ஜி.ஆர். அரசு என்று சொல்வது வழக்கம். அந்த வரிசையில் இதனை ஸ்டாலின் அரசு என்று சொல்லிக் கொள்ளாமல், திராவிட மாடல் அரசு என்று நான் குறிப்பிட்டேன். ஒரு தனி மனிதனின் ஆட்சி அல்ல. ஒரு தத்துவத்தின் ஆட்சி என்பதன் அடையாளமாகத்தான் திராவிட மாடல் அரசு என்று சொன்னேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும், கொள்கையும் இயக்கமும்தான் முன்னிலை பெற வேண்டும்; வலிமை பெற வேண்டும். தமிழ்நாடே சமத்துவபுரம் ஆக வேண்டுமென்று திராவிட கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, இலக்குகளை நிர்ணயித்து திட்டங்களைத் தீட்டுகிறோம். நம்முடைய தமிழ்ச் சமூகம், சிந்தனையால், பண்பாட்டால், பழக்க வழக்கங்களால் உயர்வடைய வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற மனித உரிமைச் சமூகமாக வளர வேண்டும்.

சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - மதச்சார்பின்மை – கூட்டாட்சிக் கருத்தியல் - அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள் – அதற்காகத்தான் உழைக்கின்றோம்.

கடந்த மார்ச் 14 அன்று நிதிநிலை அறிக்கையையும், 15ஆம் நாள் வேளாண்மைத் துறை நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்தோம். அதைத் தொடர்ந்து, நம்முடைய அவை முன்னவர், மூத்த அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கை தொடங்கி, வரிசையாக ஏப்ரல் மாதம் முழுவதும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தங்களுடைய துறைகள் சார்பிலான மானியக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அந்தத் துறைகள் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசுகிறபோதுகூட, பல்வேறு அறிவிப்புகளைச் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் அறிவிப்புகள் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான மைல் கற்கள்! யார் சிறப்பாக செயல்படுவது என்று ஒவ்வொரு துறைக்கு இடையிலும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகிறார்கள். ஒவ்வொரு துறையும், வெல்லும் துறையாக செயல்பட்டு வருவதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

“அனைத்துத் துறை வளர்ச்சி - அனைத்து மாவட்ட வளர்ச்சி” என்று குறிப்பிட்டு திட்டங்களைத் தீட்டியிருக்கிறோம். ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு ஏற்றம் அளிக்கும் மாதமாக அமைந்ததால் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருக்கிறேன்.

அமைச்சர் பெருமக்கள் இந்த மாமன்றத்தில் பேசும்போது, தமிழ்நாடு எந்தெந்த வகையில் எல்லாம் வளர்ந்திருக்கிறது… அவர்களின் துறைகள் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று பெருமையுடன் குறிப்பிட்டு பேசினார்கள். அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!

இந்த அவையை மாண்பு தவறாமால் கண்ணியத்துடன் கட்டுக்கோப்பாகவும் மக்களாட்சி இலக்கணம் சொல்லும் வகையில் வழிநடத்திய பேரவைத் தலைவர் அவர்களுக்கும், பேரவை துணைத் தலைவர் அவர்களுக்கும் இந்த மாமன்றத்தின் சார்பாக என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது உங்கள் துறையை வளர்தெடுத்ததற்கு, உங்களின் திறமை காரணமாக இருந்தாலும், இந்த வளர்ச்சிக்கு அடிப்படையான - முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் மாநிலத்தின் அமைதி! அதற்கு என்னுடைய துறையான காவல்துறை தான் காரணம்.

ஏன் என்றால், அமைதியான மாநிலத்தில்தான் தொழில் வளரும்; தொழிற்சாலைகள் வரும்; கல்வி மேம்படும்; பெண்களும் இளைஞர்களும் முன்னேற்றம் காண்பார்கள்; விளையாட்டுத் துறை மேம்படும்; உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிக்கும்; சுற்றுலா பயணிகள் வருவார்கள்; கோயில்கள் தழைக்கும்! தமிழ்நாட்டில் நிலவும் இந்த அமைதிக்குக் காரணம், என்னுடைய துறையான, காவல்துறை!

சட்டம் – ஒழுங்கை முறையாக பேணி, இந்த சாதனைகளுக்கு அடித்தளமிட்ட காவல்துறை சார்ந்த அனைவருக்கும் நானும் – நீங்களும் – தமிழ்நாட்டு மக்களும் நன்றிக்குரியவர்கள்!

சட்டம் – ஒழுங்கு சீராகவும் – தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாகவும் இருப்பதால்தான், பெரிய அளவிலான சாதிச் சண்டைகளோ – மதக் கலவரங்களோ – பெரிய கலவரங்களோ – வன்முறைகளோ இல்லை. கலவரங்களை தூண்டலாம் என்று சிலர் நினைத்தாலும், தமிழ்நாட்டு மக்களே அதை முறியடித்துவிடுகிறார்கள்.

“இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான்! 2026-ல் Version 2.0 Loading!”- முதலமைச்சர் உரை உள்ளே!

இதெல்லாம் நடந்திருந்தால்தான், சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று புழுதி வாரி தூற்ற முடியும்? மொத்தத்தில், சட்டம் – ஒழுங்கில் கல் விழாதா என்று துடிப்பவர்கள் ஆசையில்தான் மண் தான் விழுந்திருக்கிறது!

நான் இன்னும் சொல்கிறேன், குற்றச் சம்பவம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். ஏதாவது சில இடங்களில் கவனக்குறைவாக சில தவறுகள் நடந்திருந்தால்கூட அது சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக அதை திருத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

“நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்”-என்று பிடிவாதமாக இருப்பவன் இல்லை நான். மக்களாட்சியில் எல்லோருடைய கருத்துகளையும் கவனித்து – ஆராய்ந்து – சரியானவற்றை சரியான நேரத்தில் செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான்!

உள்நோக்கத்தோடு – அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று பேசுபவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்: இது, மணிப்பூர் அல்ல! இது, காஷ்மீர் அல்ல! உத்தரப் பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கு நடக்கவில்லை! இது, தமிழ்நாடு! அதை மறந்துவிடாதீர்கள்.

காவல் துறையை நவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து எப்படியெல்லாம் எடுக்கப்பட்டு வருகிறது என்று நேற்றைய தினம் நான் பல்வேறு நேரங்களில் குறுக்கீட்டு பேசும்போது தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறேன். இதைப்பற்றி அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை.

இருந்தாலும் சொல்கிறேன், குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்டறியும் நவீன வலைப்பின்னல் அமைப்பு மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆன்லைனில் புகார்களைப் பதிவு செய்யவும், துறைகளுக்கு இடையே தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வசதியைப் பெறவும் இயலும்.

சைபர் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களையும் கட்டுப்படுத்தி வருகிறோம். காவல் - உள்துறை – தீயணைப்பு மற்றும் தடயவியல் துறை சார்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகளை, புத்தங்களாக அச்சிட்டு, இந்த மாமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கியிருக்கிறோம்.

ஊடக நண்பர்களும் அந்தப் புத்தகத்தினைப் பெற்று, அதிலுள்ள சாதனைகளையும் - தரவுகளையும் – புள்ளிவிவரங்களையும் – உண்மைகளையும் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்களைத் தடுக்கும் துறையாக காவல்துறை செயல்படவேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். இந்த நிலை உருவாகவேண்டும் என்றால், காவல்துறை சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த சமூகமும் சில பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும்.

காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கும் நான், இந்த தருணத்தில், இந்த அவையின் மூலமாக பொதுமக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது… சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது நம்முடைய அனைவரின் கூட்டுப் பொறுப்பு!

எனவே, நீங்கள் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும். சின்ன சின்ன அலட்சியங்கள்கூட தவிர்த்து, சுய ஒழுக்கத்தோடு எல்லோருக்கும் இருக்க வேண்டும். ஒரு குற்றம் நடந்த பிறகு, உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களை பாராட்டும் அதேவேளையில், ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பே, அதை உணர்ந்து தடுக்கும் முன்னெச்சரிக்கையும் நமக்குத் தேவை!

உங்கள் சுற்றுப்புறங்களில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் – செயல்பாடுகள் ஏதாவது தெரிந்தால், உடனடியாக காவல்துறைக்குத் தெரியப்படுத்துங்கள். அதுமட்டுமல்ல, ஓய்வில்லாமல், விழிப்புணர்வோடும் – கண்காணிப்போடும் களத்தில் இருக்கும் காவல்துறையினரிடம் கனிவாக நடந்துக்கொள்ளுங்கள். அதேபோல் காவல்துறையினரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளவேண்டும்.

காவல்துறையிடம் அதிகாரம் இருக்கிறது சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டவும் – குற்றங்களைத் தடுக்கவும்தான் என்பதை அத்துமீறும் சில காவலர்கள் உணரவேண்டும். காவல் உயரதிகாரிகள் இதை உறுதிசெய்யவேண்டும். காவலர்கள் தங்களின் பணிச்சுமையையும் – தனிப்பட்ட வெறுப்புகளையும் பொதுமக்களிடம் காட்டக் கூடாது. காவல்துறையும் பொதுமக்களும் நண்பர்கள் என்பதை இருதரப்பும் உணர்ந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.

“இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான்! 2026-ல் Version 2.0 Loading!”- முதலமைச்சர் உரை உள்ளே!

பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே உள்ள இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்திட என் நெஞ்சில் நீண்ட காலமாக இருந்து வரும் எண்ணத்தை, உணர்வை செயல் வடிவம் கொடுக்க நான் விரும்புகிறேன். சட்டம் ஒழுங்கை காப்பற்றி இரவு பகலும் கண் துஞ்சாது காவல் பணியில் ஈடுபட்டு, பொது அமைதியை பாதுகாக்கும் காவலர்களுக்கென தனி நாளை கொண்டாடுவதற்காக, காவலர்களின் சேவையை போற்றி பாராட்டிட முதன் முதலாக 1859-ல் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும்.

இந்நாளில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்து சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்ட காவல்துறையின் சிறப்புகளை சொல்லக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறை சார்பில் கண்காட்சிகள் நடத்துதல், குருதிக்கொடை முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அன்று நடைபெறும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

“தமிழ்நாடு என்பது, குற்றங்கள் நடக்காத மாநிலம்! போதை பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம்! பாலியல் குற்றம் இல்லாத மாநிலம்!” என்ற நிலையை நாம் எட்டவேண்டும். எங்கும் யாராலும் குற்றம் நடக்க கூடாது. மீறி நடந்தால் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும். சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு உடனடியாக தண்டனை பெற்றுத் தரப்படவேண்டும்.

இந்த உறுதிமொழியை நான் மட்டும் எடுத்தால் போதாது; காவல் துறையின் உயரதிகாரிகள் எடுத்தால் போதாது; ஒவ்வொரு காவலரும் எடுக்கவேண்டும்! என்னுடைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், எந்த வகைப்பட்ட குற்றமும் நடக்கவில்லை - நடக்கவும் விடமாட்டேன் என்று ஒவ்வொரு காவலரும் முடிவெடுத்துவிட்டால் குற்றங்கள் பூஜ்ஜியத்திற்கு வந்துவிடும்!

மனித வளர்ச்சியின் எல்லா குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு - குற்றச் சம்பவங்களில் பூஜ்ஜியமாக இருந்தால்தான் நமக்கு பெருமை! எனவே, இதில் பூஜ்ஜியம் வாங்குவதற்கு, ஒவ்வொரு காவலரும் 100 விழுக்காடு அர்ப்பணிப்போடு பணியாற்றவேண்டும்!

நேற்று மாண்புமிகு 11 உறுப்பினர்கள் இந்த அவையிலே 5 மணிநேரம் 25 நிமிடம் மானியத்தை பற்றி விவாதித்திருக்கிறார்கள். அவற்றில் பலவற்றிற்கு அவ்வப்போது பதிலளித்து இருக்கிறேன். விடுபட்ட சில பதில்களை சொல்ல வேண்டும் என்றால் உறுப்பினர் திரு. ஓ.எஸ். மணியன் அவர்கள் திருமருகல் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தக் கட்டடம் கேட்டு இருந்தார். அது நிச்சயம் கட்டித்தரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் உறுப்பினர் வேல்முருகன் அவர்கள காவலர்களுக்கு வருடாந்தர மருத்துவ சோதனைக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் காவலர்கள் ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள உறுதி செய்யப்படும்.

அதேபோல உறுப்பினர் பேராசிரியர் ஜவஹிருல்லா அவர்கள் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அவசியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், உடற்கூறாய்வு சான்றிதழ் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். காவல் நிலையங்களை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

சிசிடிவி கேமராக்கள் அனைத்து காவல் நிலையங்களிலும் இருப்பது நிச்சயமாக உறுதி செய்யப்படும். உடற்கூறாய்வு சான்றிதழை பொறுத்தவரை உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. அதில் எந்தவித தாமதமும் இல்லாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் உறுப்பினர் திரு. மாரிமுத்து அவர்கள் கோட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தக் கட்டடம் தேவையென கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை ஏற்கப்படுகிறது. கோட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

உறுப்பினர் நாகை மாலி அவர்கள், காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் சி.டி. செல்வம் அவர்கள் தலைமையிலான ஐந்தாவது காவல் ஆணையம் 934 பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.

“இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான்! 2026-ல் Version 2.0 Loading!”- முதலமைச்சர் உரை உள்ளே!

அதில் 86 பரிந்துரைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டன. மேலும் 274 பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, மற்றவை அரசின் பரிசீலனையில் உள்ளன என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் அடுத்து உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அவர்கள், அதேபோல் அவருடைய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரி என்னிடம் கடிதத்தை அளித்திருக்கிறார்கள். நேரிலும் சொல்லியிருக்கிறார்கள்.

அந்த அடிப்படையிலே ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். பல்லாண்டு காலமாக தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வு முறையிலே தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசை பட்டியலானது சமூகநீதி அடிப்படையிலே இருந்து வந்த நிலையிலே கடந்த 2019ஆம் ஆண்டு வரப்பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக இந்த முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் அதற்கான சட்டரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும்.

அந்த குழு அளிக்கக்கூடிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து ஒரு நல்ல தீர்வு காணப்படும் என்றும் தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இன்னொரு முக்கிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிப்படுத்தும் அடையாளமாக “காலனி” என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டார்கள், வெளிநாடு தொழிலாளர்கள் பணிபுரியக்கூடிய இடங்களில் கண்காணிப்பு தேவை என்று பேசியிருக்கிறார்கள். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தங்கி பணிபுரியக்கூடிய வெளிநாடு தொழிலாளர்கள் அனைவரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்கப்படுகிறார்கள்.

அதேபோல் உறுப்பினர் கோ.க. மணி அவர்கள் கேட்டுக்கொண்டபடி, அவருடைய தொகுதியிலே தருமபுரி காவல் உட்கோட்டம், மதிகோன்பாளையம் காவல் வட்டத்தில் அமைந்துள்ள புலி கிராமத்தில் புதிய காவல் நிலையம் 2 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசிய அத்தனை விவகாரங்களிலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இனியும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு, இந்த அரசு பொறுத்தவரைக்கும் எந்தவித அழுத்தங்களுக்கும் உள்ளாகாமல் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் நீதியை நிலை நாட்டுவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு உள்துறை சார்பில் 102 அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. காலத்தின் அருமை கருதி சிலவற்றை இப்போது நான் அறிவிக்க விரும்புகிறேன். மீதமுள்ள அறிவிப்புகளை நான் படித்ததாக கருதி அவை குறிப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த மார்ச் 14-ஆம் நாள் இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியது. நான் மட்டுமல்ல, பெரும்பாலான அமைச்சர் பெருமக்களும் – உறுப்பினர்களில் பலரும் எல்லா நாளும் அவைக்கு வந்திருக்கிறார்கள். விவாதங்களில் பங்கெடுத்து பதிலளித்திருக்கிறோம்.

கேள்வி நேரம் - கவன ஈர்ப்புத் தீர்மானம் - மானியக் கோரிக்கை விவாதம் – பதிலுரை என்று மிகச் சிறப்பாக தங்களின் கடமையை ஆற்றியிருக்கிறார்கள்!

“இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான்! 2026-ல் Version 2.0 Loading!”- முதலமைச்சர் உரை உள்ளே!

ஜனநாயகப் பண்போடு இந்த அவையை நடத்த துணை நின்ற அத்தனைப் பேருக்கும் என்னுடைய இதயமார்ந்த நன்றி! இந்த ஜனநாயகப் பண்பு எல்லா நாளும் தொடரவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுதான் நம்முடைய அனைவரின் நமது முதல் கடமை! அந்தக் கடமையில் எந்த இடத்திலும் தவறிவிடக் கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருக்கிறேன்.

என்னை பொறுத்தவரைக்கும் வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறேன். அதனால்தான், கடந்த நான்காண்டுகளில், தலைமுறைகளைக் கடந்தும் பயனளிக்கக்கூடிய ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இந்த திட்டங்கள் எல்லாம் ஸ்டாலின் பெயரை அல்ல, திராவிட மாடல் அரசின் பெயரை சொல்லும்.

கலைஞர் உரிமைத்திட்டம் – விடியல் பயணம் – முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – புதுமைப்பெண் – தமிழ்ப்புதல்வன் – நான் முதல்வன் - இல்லம் தேடிக் கல்வி –மக்களைத் தேடி மருத்துவம் – இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 – முதல்வர் மருந்தகம் - கலைஞர் கனவு இல்லம் – ஊட்டச்சத்தை உறுதி செய் – தோழி விடுதி – அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் – உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசு செயல்படுத்திய தெம்போடு உறுதியாக சொல்கிறேன்…

கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியை விட ஆயிரம் மடங்கு சிறப்பான சாதனைகளை அனைத்துத் துறைகளிலும் செய்திருக்கிறோம். இந்த உறுதியோடும் – மக்கள் மேல் உள்ள நம்பிக்கையோடும் சொல்கிறேன்…

அடமானம் வைக்க நினைப்பவர்களாலும் – அபகரிக்க நினைப்பவர்களாலும் தமிழ்நாட்டை ஒருபோதும் சூறையாட முடியாது!

எங்களை எல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றே சொன்னார், தமிழகம் உலகின் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அது யாருடைய வேட்டைகாடாகவும் இருந்திட ஒருநாளும் ஒப்புக் கொள்ள மாட்டோம். சுயாட்சி என்பது எங்கள் பிறப்புரிமை. அதனை தடுக்கவோ, தகர்க்கவோ எவருக்கும் உரிமையில்லை. இது எங்கள் போர் முழக்கம் என்று பேரறிஞர் அண்ணா முழங்கினார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் சட்டமன்றத்தில் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம்.

அடுத்தப்படியாக மாநில சுயாட்சி கனவையும் நிறைவேற்ற குழு அமைத்திருக்கிறோம். நான் தொடங்கியுள்ள இந்த பயணம் நீண்டது. முதலமைச்சராக ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிற இந்த வேளையில், இந்த மன்றத்தில் நின்று உறுதியோடு சொல்கிறேன், என் பயணம் தொடரும்.

தமிழ்நாட்டிற்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக என் பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading அதில் இன்னும் சாதனைகளை படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும். வாழ்க தமிழ், வெல்க தமிழ்நாடு.

Related Stories

Related Stories