இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையும், மொழி, மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
குறிப்பாக, இந்தியை திணிப்பதை ஒற்றை நோக்காகக் கொண்டு, மாநில மொழிகளை அழித்து வருவது, பா.ஜ.க.வின் அண்மை நடவடிக்கைகளால் அதிகரித்துள்ளது. அதற்கு, போஜ்புரி, மால்வி, சட்டீஸ்கரி போன்ற மொழிகள் இரையாகியுள்ளது சான்றுகளாகவும் அமைந்துள்ளன.
இந்த வரிசையில் தமிழ் இணைந்து விடக்கூடாது என்பதற்காக, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை எவ்வித சமரசமும் இன்றி கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக, ஒன்றிய பா.ஜ.க அரசு கல்வி நிதியை நிறுத்திய நிலையிலும், தமிழ்நாடு தந்நிலையைவிட்டு விலகாமல் இருக்கிறது.
இந்நடவடிக்கையை, இந்தியாவின் இதர மாநிலங்கள் ஆதரித்து வருவதோடு மட்டுமல்லாமல், தங்களது மாநில மொழிகளையும் காக்க வேண்டும் என்ற உணர்வு இந்திய அளவில் பெருகியுள்ளது.
அதன் விளைவாய், மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி மொழியை காக்க, மக்கள் ஒரு திரளாக குரல் எழுப்பி வருகின்றனர். இதனால், ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில், மகாராஷ்டிர பா.ஜ.க அரசே இந்தி திணிப்பை எதிர்ப்பது போன்ற காட்சிப்படுத்தலை முன்னெடுத்துள்ளது.
இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில், “மகாராஷ்டிரத்தில் இந்தியைக் கட்டாய மூன்றாவது மொழியாகத் திணித்ததற்காகக் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மராட்டி மட்டுமே கட்டாய மொழி எனக் கூறுகிறார் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள்.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதற்கு எதிராக, மிகப் பரவலாக மக்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்ததன் விளைவாக உருவான நடுக்கத்தின் வெளிப்பாடுதான் அவரது இந்தப் பேட்டி.
இந்நிலையில், பிரதமர் அவர்களும் ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களும் பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்திட வேண்டும்:
தேசிய கல்விக் கொள்கையின்கீழ், மகாராஷ்டிரத்தில் மராட்டியைத் தவிர வேறு எந்த மூன்றாவது மொழியும் கட்டாயமல்ல எனும் பட்னாவிஸ் அவர்களின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறதா?
எனில், தேசிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழியைப் பயிற்றுவிப்பது கட்டாயமல்ல என்று தெளிவான வழிகாட்டுதலை ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குமா?
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக அநியாயமாக தமிழ்நாட்டுக்குத் தராமல் நிறுத்தி வைத்திருக்கும் 2,152 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவிக்குமா?” என பதிவிட்டுள்ளார்.