முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.02.2025) ஐ.டி.சி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், CtrlS குழுமம் ரூ.4,000 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைத்துள்ள CtrlS சென்னை தகவல் தரவு மையத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கிவரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கினை விரைவில் எய்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
தரவு மையங்களுக்கான முன்னணி மையமாக உள்ள தமிழ்நாட்டினை, தரவு மைய சந்தையில் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாகவும், நாட்டின் தரவு மைய தலைநகராகவும், மாற்றம் செய்வதற்காக தொலைநோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு தரவு மையக் கொள்கையை 26.11.2021 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். அதன் பலனாக, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன.
CtrlS நிறுவனம்
ஹைதராபாத் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட CtrlS Datacentres Limited பல முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டது. இத்தகவல் தரவு மையத்திற்கு மொத்தம் 92,903 சதுர மீட்டர் கட்டட பரப்பளவில், இரண்டு கட்டங்கள் அமைக்கப்படுகின்றன.
120 மெகாவாட் வழங்கும் 230 KV துணை மின் நிலையத்தின் ஆதரவுடன் இயற்கைச் சீற்றங்களை சமாளிக்கும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்களுடன், இத்தகவல் தரவு மையம் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக, 48,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்டடம், 72 MW சுமை பயன்பாட்டுடன் அமைக்கப்பட்டு, முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.