மு.க.ஸ்டாலின்

”பாஜகவின் மக்கள் விரோத ஆட்சி வீழ்த்தப்படும்”: THE WEEK ஆங்கில இதழுக்கு முதலமைச்சர் அளித்த முழு பேட்டி!

நிச்சயம் எதிர்கட்சிகளின் அணிச்சேர்க்கை அமைந்தால் பா.ஜ.க.வின் மக்கள் விரோத ஆட்சி வீழ்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”பாஜகவின் மக்கள் விரோத ஆட்சி வீழ்த்தப்படும்”: THE WEEK ஆங்கில இதழுக்கு முதலமைச்சர் அளித்த முழு பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், 23 ஜூலை, 2023 தேதியிட்ட "THE WEEK" ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம்:

1. கடந்த ஜூன் 23 அன்று பாஜக-வுக்கு எதிரான எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றீர்கள். அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

இந்தியாவின் ஜனநாயகத்தை, அரசியல்சட்ட நெறிமுறைகளைக் காப்பாற்ற இந்தியாவே அணி திரண்டு விட்டது என்பதைத்தான் பாட்னா கூட்டம் உணர்த்துகிறது. இவர்கள் ஒன்றாக மாட்டார்கள் என்றார்கள். ஒரு கூட்டத்தைக் கூட நடத்த முடியாது என்றார்கள். ஒத்த கருத்தை இவர்களால் எட்ட முடியாது என்றார்கள். ஒரே கூட்டத்தோடு உடைந்து விடுவார்கள் என்றார்கள். இவை அனைத்தும் பொய்யாக்கப்பட்டது. இந்தியாவின் அனைத்துத் திசைகளில் இருந்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இது என்னைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. எங்களது அரசியல் இலக்கு நிச்சயம் வெல்லும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

2. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு நீங்கள் மையப்புள்ளியாக விளங்குகிறீர்க. “காங்கிரஸ் இல்லாத கூட்டணி வெற்றிக்கு உதவாது” என்று முதலில் சொன்னது நீங்கள்தான்.

ஆமாம்! காங்கிரசையும் இணைத்துக் கொண்டுதான் பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும் என்பதை நான் சொன்னேன். மூன்றாவது அணி அமைப்பது, பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்வதாக ஆகிவிடும். பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் பிரிந்து இருப்பதால் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் பா.ஜ.க. வீழ்ந்துவிடும்.

நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், எங்கள் அனைவர் இலக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்று மட்டுமே. எனவே அனைத்துக் கட்சிகளும் இந்த ஒற்றை இலக்கில் ஒன்று சேர்வார்கள். காங்கிரசுக்கும் மற்ற சில மாநிலக் கட்சிகளுக்குமான முரண்பாடு என்பது காலப் போக்கில் மறைந்துவிடும்.

3. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் நிதிஷ்குமார் அவர்களின் பங்களிப்பு எத்தகையதாக இருக்கும்?

எந்த ஒன்றுக்கும் வழிநடத்திச் செல்லும் சக்தி ஒன்று தேவை. அத்தகைய சக்தியாக அருமைச் சகோதரர் நிதிஷ் குமார் அவர்கள் இருக்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் அறிமுகமான முகமாகவும் இருக்கிறார். ஒன்றிய அமைச்சராக இருந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் நீண்ட காலத் தொடர்புள்ளவர் நிதிஷ் அவர்கள். கொள்கை உறுதி கொண்ட அவர், அன்பால் அனைவரையும் அரவணைக்கக் கூடியவராகவும் இருக்கிறார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சீடர் அவர். அவர் அமைதியாக, அதே நேரத்தில் உறுதியாக இந்த அணிச்சேர்க்கையை நடத்திக் காட்டுவார் என நான் பெரிதும் நம்புகிறேன்.

4. நிதிஷ்குமார் அவர்களுக்கு இது தொடர்பாக தாங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?

சில முக்கியமான ஆலோசனைகளை பாட்னா கூட்டத்தில் அனைத்துத் தலைவர்களுக்கும் நான் சொல்லி இருக்கிறேன்.

* எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.

* கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால் தொகுதிப் பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம்.

* அதுவும் முடியவில்லை என்றால் பொதுவேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம்.

* தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது.

* அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

* இதுபோன்று எழும் பிரச்னைகளைச் சரி செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும். - என்று வரிசையாகச் சொல்லி இருக்கிறேன்.

”பாஜகவின் மக்கள் விரோத ஆட்சி வீழ்த்தப்படும்”: THE WEEK ஆங்கில இதழுக்கு முதலமைச்சர் அளித்த முழு பேட்டி!

5. இந்த முயற்சிகளில் மமதா பானர்ஜி பங்காற்றுவாரா? மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளும் காங்கிரசும் அவருக்கு ஆதரவாக இல்லை என்ற நிலை உள்ளதே?

அருமைச் சகோதரி மமதா பானர்ஜி அவர்கள் இந்த அணிச்சேர்க்கையில் மிக முக்கியமான அரசியல் தலைவராக இணைந்துள்ளார். நீங்கள் சொல்லும் முரண்பாடுகள் என்பவை மேற்கு வங்கத்தைப் பொறுத்தவை ஆகும். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் இந்தியாவை நினைத்தே மமதா அவர்கள் முடிவெடுத்து பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். அந்தக் கூட்டத்தில் நீங்கள் சொல்லும் காங்கிரசும் இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தது. மமதா அவர்களும் இருந்தார்கள்.

6. நீங்கள் எல்லோரும் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

உறுதியாக! நாங்கள் நினைக்கும் அணிச்சேர்க்கை அமைந்தால் நிச்சயமாக பா.ஜ.க.வின் மக்கள் விரோத ஆட்சி வீழ்த்தப்படும்!

7. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு உள்ளதா?

ஆமாம்! நடைபெறக் கூடிய ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை மாநிலங்களில் நிச்சயம் தோற்கும். ஏற்கனவே கர்நாடக மாநிலத் தேர்தலில் பா.ஜ.க. தோற்றுள்ளது. அதுபோன்ற தோல்வியை இந்தச் சட்டமன்றத் தேர்தல்களிலும் அடைந்தால், நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் தோல்வியை அடைவோமே என்று பா.ஜ.க.வுக்கு பயம் வந்துள்ளது. எனவேதான் இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தலாமா என்று யோசிப்பதாகவும் கேள்விப்படுகிறேன்.

8. காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தி அவர்களும் அந்தந்த மாநிலங்களில் வலுவாக உள்ள மாநிலக் கட்சிகளுடன் தாராளப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலங்களில் வலுவான கட்சிகள் இருந்தாலும், அகில இந்திய முகம் ஒன்று தேவை. அதுதான் காங்கிரஸ் கட்சியாகும். விடுதலைக்குப் பிறகு, இந்தியாவை பெரும்பாலான ஆண்டுகள் ஆண்ட கட்சி அது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களும், ஐந்தாண்டுத் திட்டங்களும் தான் சுதந்திர இந்தியாவை உருவாக்கியவை. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கான தகுதியும் மதிப்பும் வழங்கப்பட வேண்டும்.

9. இந்திய ஒற்றுமைப் பயணத்துக்குப் பின் ராகுல் காந்தியிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

ராகுல்காந்தியின் பயணம், மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அவர் இந்தியாவின் நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறார்.

10. ஒன்றிய அளவில் பா.ஜ.க ஆட்சி தொடர்ந்தால் அதன் தாக்கம் எவ்வாறனதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

அமைதி இந்தியாவை அச்சமிகு இந்தியாவாக மாற்றிவிட்டார்கள். அனைவர்க்குமான இந்தியாவை ஒற்றை இந்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள். மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவில் மாநிலங்களையே சிதைக்கப் பார்க்கிறார்கள். ஒற்றை மொழி நாடாக, ஒற்றை மத நாடாக மாற்ற நினைக்கிறார்கள். ஒருவிதமான எதேச்சாதிகாரத் தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு வேட்டு வைக்க நினைக்கிறார்கள். மீண்டும் இவர்கள் வென்றால், இந்தியா, இந்தியாவாக இருக்காது!

”பாஜகவின் மக்கள் விரோத ஆட்சி வீழ்த்தப்படும்”: THE WEEK ஆங்கில இதழுக்கு முதலமைச்சர் அளித்த முழு பேட்டி!

11. பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நீங்கள் ஃபரூக் அப்துல்லா அவர்களையும் மெஹபூபா முப்தி அவர்களையும் சந்தித்தீர்கள். பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்பு, அங்கு நிலவும் சூழ்நிலையைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

காஷ்மீரில் இப்போது இருப்பது உண்மையான அமைதி அல்ல. கையையும் காலையும் கட்டிப் போட்டு, வாயைப் பொத்திவிட்டு ஒருவன் அமைதியாக இருக்கிறான் என்பதைப் போன்ற அமைதிதான் அது. அரசியல் தலைவர்கள் அனைவரையும் வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு, 370-ஆவது பிரிவை நீக்கினார்கள். ஏதோ காஷ்மீருக்கு மட்டும்தான் சிறப்புரிமை இருப்பதைப் போல பரப்புரை செய்தார்கள். வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றுக்கும் சிறப்புரிமை தரப்பட்டுள்ளதே. அதை நீக்க பா.ஜ.க.வால் முடியுமா? தைரியம் இருக்கிறதா?

370-ஆவது பிரிவை நீக்கியது பா.ஜ.க.வின் சாதனையல்ல. சிறுபான்மை மக்கள் மனதில் விதைக்கப்பட்ட கீறல் ஆகும்.

12. வடக்கு – தெற்கு என்ற வேறுபாடு மேலும் அதிகமாகியிருக்கிறதா? அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றால், பா.ஜ.க. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ளுமா?

மக்கள்தொகைக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகப் பின்பற்றிய தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு தண்டனை தரத்தக்க வகையில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சரியாக அமல்படுத்தாத வட மாநிலங்களுக்கு நிறைய மக்களவைத் தொகுதிகள் கிடைக்கும்.

தங்களுக்கு வாக்களிக்காத தென்மாநிலங்களைப் பழிவாங்க, இந்தத் திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார்கள். தேர்தலில் வென்றால் அதனை அவர்கள் செய்யலாம் என நினைக்கிறார்கள்.

இது மிகப்பெரிய அரசியல் விளைவுகளுக்கு இட்டுச் செல்லும். தென் மாநிலங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்படும். ஏற்கனவே, ஜி.எஸ்.டி. மூலமாக மாநிலத்தின் நிதி ஆதாரங்களை முழுமையாகப் பறித்துவிட்டார்கள். கல்வி உரிமையும் பறி போய்விட்டது. எவ்வளவுதான் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாடு செழித்தாலும் எங்கள் சம்பாத்தியம் அனைத்தையும் ஒன்றிய அரசு பறித்துவிடும். இதனை சொல்வதற்கான ஒரே இடம் நாடாளுமன்றம்தான். அங்கும் நமது குரல் எடுபடாமல் போகுமானால் என்ன செய்ய முடியும்? எனவே, இதற்கான மாற்று ஏற்பாட்டை அனைத்து மாநிலக் கட்சிகளுடன் இணைந்து சிந்திக்க வேண்டும்.

13. ஆளுநரின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு மாநிலங்களிலும் புகார் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அத்தகைய சூழல் நிலவுகிறதே?

ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநராக வந்தது முதல் தமிழ்நாட்டில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்துவதையே தனது வேலையாக வைத்திருக்கிறார். அவருக்குப் பலமுறை இதனை உணர்த்தியாகி விட்டது. ஆனாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி அவர்கள் விடுத்த அறிக்கையானது, ஆளுநர் ரவியின் அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறுவதாகும். இது நிர்வாக ஒழுக்க மீறல் ஆகும்.

ஒரு அமைச்சரை நியமிப்பதும் – அந்த அமைச்சரை நீக்குவதும் முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்புரிமை சார்ந்ததே தவிர - வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை.

ஒரு அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதால் - அவரைத் தான் நியமிப்பதாகவோ - அதனாலேயே நீக்கி விடலாம் என்றும் பொருள் அல்ல. அந்த அதிகாரம், நியமனப் பதவியில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் ஆளுநருக்கு இல்லை. அதனை அவர் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவருக்கான வேலைகளை மட்டும் அவர் பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் வைத்துள்ளார். அதனைப் போட்டு அனுப்ப வேண்டும்.

அதை விட்டுவிட்டு தனக்கு உரிமையில்லாத செய்கைகளில் மூக்கை நுழைத்து மூக்கறுபட்டுக் கொண்டு இருக்கிறார் ஆளுநர்.

தமிழ்நாடு வளர்வது, அமைதியாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. குழப்பம் ஏற்படுத்தி, இந்த மாநிலத்தைக் கெடுக்க நினைக்கிறார். அவரிடம் நல்லெண்ணம் இல்லை.

14. ஆளுநர்களால் அடிக்கடி தொல்லைக்கு உள்ளாகும் மாநிலங்கள் இதனை எதிர்கொள்ள ஒரு பொதுவான வழிமுறை வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

ஆளுநர் பதவியையே நீக்கிவிடுவதுதான் ஒரே வழி!

15. நீண்ட காலமாகத் தமிழ்நாடு தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக உள்ளது. தற்போது ஒன்றிய அரசு உட்கட்டமைப்புத் திட்டங்களைப் பெரிய அளவில் முன்னெடுத்து வரும் நிலையில், இதன் அடுத்தகட்ட பாய்ச்சலில் தமிழ்நாடு அங்கம் வகிப்பதை எவ்வாறு உறுதி செய்வீர்கள்?

தமிழ்நாட்டினை மேலும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும், மாபெரும் பொருளாதார மாற்றத்தை மக்களுக்கு அளிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு புதிய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, வரும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை மிகப்பெரிய அளவில் நடத்திட திட்டமிட்டு இருக்கிறோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030-2031 நிதியாண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான ஒரு இலட்சிய இலக்கினை நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம்.

இந்த இலக்கினை அடைந்திட, 23 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தாக வேண்டும்.

46 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடவும் வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகின்றோம்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த இந்த இரண்டு ஆண்டுகளில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வந்துள்ளது.

”பாஜகவின் மக்கள் விரோத ஆட்சி வீழ்த்தப்படும்”: THE WEEK ஆங்கில இதழுக்கு முதலமைச்சர் அளித்த முழு பேட்டி!

16. மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கத் தொடங்கிய முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பிரதமர் மோடி இதை ‘இலவசக் கலாச்சாரம்’ என்றும், ‘இது பொருளாதாரத்தைப் பாதிக்கிறது’ என்றும் கூறுகிறாரே?

இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்று வாக்குறுதி கொடுத்தது குஜராத் பா.ஜ.க. மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்று சொல்லி வாக்கு கேட்டது கர்நாடக பா.ஜ.க. ஆனால் பிரதமர் மோடி, இலவசங்களுக்கு எதிராகப் பேசுகிறார். இந்த மாநில பா.ஜ.க. எல்லாம் அவரது கட்டுப்பாட்டில் இல்லையா?

வறுமையும் மக்கள்தொகையும் அதிகமாக உள்ள நாட்டில் இலவசங்கள் தவிர்க்க முடியாதவை ஆகும். இதனை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டுள்ளது.

“தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது. ஆனால் சரியான வாக்குறுதிகள் எது, பொதுப் பணத்தைச் செலவிடுவதற்கான சரியான வழி எது என்பதுதான் எங்களது கேள்வி" என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் கூறியிருந்தார்.

''உழவர்களுக்கு மின்சாரம், விதைகள், உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை இலவசமாகக் கருதமுடியுமா? இலவச சுகாதாரச் சேவைகள், இலவச குடிநீர், நுகர்வோருக்கு இலவச மின்சாரம் ஆகியவற்றையும் இலவசமாகக் கருதமுடியுமா? மக்களின் ஊதியம், வாய்ப்புகள் போன்றவற்றில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகளை ஈடுசெய்ய வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டமே சொல்கிறது" என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

இல்லாத மக்களுக்கு உதவத்தான் அரசாங்கம் இருக்கிறது. இலவசமாக எதையும் தரமாட்டோம் என்று இருக்க முடியாது. ஏழைகளுக்குத் தருவதை குறை சொல்லும் பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தில்தான் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இது இலவசமா? சலுகையா? உதவியா? கைம்மாறா?

17. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் வலிமைக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, உலகளாவிய சூழ்நிலை மற்றும் கோவிட் பெருந்தொற்று காரணமாக இவை பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதை எப்படி சரிசெய்யப் போகிறீர்கள்?

தொழில் துறையைப் போலவே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மீண்டெழுந்துள்ளது. இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-ஆவது இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில், சுமார் 50 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது நாட்டிலுள்ள மொத்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் 7.8 விழுக்காடு ஆகும். கடந்த ஆட்சியில் MSMEதுறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 607.60 கோடி இருந்த நிலையில் எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு, 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 741.96 கோடியாகவும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ. 1025.10 கோடியாகவும் இந்த நிதியாண்டான 2023-24 ஆம் ஆண்டில் ரூ. 1502.11 கோடியாக உயர்த்தி வழங்கியுள்ளோம்.

18. ஊதியம், ஓய்வூதியம், கடன்களுக்கான வட்டி ஆகியவற்றுக்காக 3.08 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக மாநில நிதிநிலை அறிக்கை கூறுகிறது. இதனால், உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் வளம் சேர்க்கும் திட்டங்களுக்குச் செலவிட 45,000 கோடி ரூபாய் மட்டுமே மாநில அரசிடம் எஞ்சியிருக்கிறது. இவையன்றி, 37,540 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறை இருக்கிறது. இந்த நிதிநிலை நெருக்கடியைத் தவிர்க்க மாநில அரசின் எவ்வாறு திட்டமிட்டுள்ளது?

மிக மோசமான நிதி நெருக்கடி காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தோமே தவிர, அதனைக் காரணமாகக் காட்டி எதையும் செய்யாமல் இருந்தது இல்லை.

வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்துள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகையை வழங்கப் போகிறோம். ஒரு கோடி பெண்கள், மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை பெறப் போகிறார்கள்.

19. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையேயான வேறுபாடு என்ன?

இரண்டுமே மக்கள் பணிதான். எதிர்க்கட்சித் தலைவராக வாதாடினேன். முதலமைச்சராக கையெழுத்துப் போட்டு நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டுகிறேன்.

20. காந்தி குடும்பத்தைக் குறிவைத்து வாரிசு அரசியல் என்று பிரதமர் மோடி விமர்சிக்கிறார். இதில் நியாயம் இருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா?

எங்களைப் பற்றி குறை சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால் வாரிசுகள் என்கிறார் பிரதமர் மோடி. இதெல்லாம் முப்பது ஆண்டுகளாக நான் கேட்டுக் கேட்டு புளித்துப் போன குற்றச்சாட்டுகள். வேறு புதிதாக எதையாவது சிந்தித்துச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories

Related Stories