மு.க.ஸ்டாலின்

“உதயசூரியன் மூலம் தமிழகத்தில் புதிய வெளிச்சம் பிறக்கப்போகிறது”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!

“சூழ்ந்திருக்கும் இருட்டில் இருந்து மீண்டு, உதயசூரியனின் வெளிச்சத்தைக் காணத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.!

“உதயசூரியன் மூலம் தமிழகத்தில் புதிய வெளிச்சம் பிறக்கப்போகிறது”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“உலகமே கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது; அ.தி.மு.க. அரசு மட்டும் கொரோனாவை வைத்து புதிது புதிதாக என்னவெல்லாம் ஊழல் செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம் - அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் திரு. கே.எஸ்.சந்திரன் அவர்களது இல்லத் திருமண விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர், அவ்விழாவில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை, “புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளரும் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான அன்பிற்குரிய கே.எஸ்.சந்திரன் - திருமதி. அழகம்மாள் ஆகியோருடைய புதல்வர் மாவட்டப் பொறியாளர் அணி துணை அமைப்பாளரான இளையசெல்வன் பி.இ. (மெரைன் இன்ஜினியரிங்) அவர்களுக்கும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் திரு. இ.கலையரசன் - திருமதி. ராஜலெட்சுமி ஆகியோரின் புதல்வி க.காவினிப்பிரியா பி.இ. அவர்களுக்கும் நமது அன்பான வாழ்த்துகளுடன் திருமண விழா இனிதே நடைபெற்றிருக்கிறது.

“உதயசூரியன் மூலம் தமிழகத்தில் புதிய வெளிச்சம் பிறக்கப்போகிறது”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!

இது சுயமரியாதைத் திருமணம். தமிழ் முறையிலான திருமணம். சீர்திருத்தத் திருமணம். அதையும் தாண்டி, புதுமையான முறையில் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றிருக்கும் திருமணம். கொரோனா காலம் நமக்குப் பல இழப்புகளை - நெருக்கடிகளை - சோதனைகளை ஏற்படுத்தினாலும், இப்படிச் சில அரிய புதுமைகளுக்கும் வழி வகுத்திருக்கிறது.

நீங்கள் காரைக்குடியில் இருக்கிறீர்கள். நான் சென்னையில் இருக்கிறேன். என்னுடைய பயண நேரத்தைக் குறைத்து, கழகப் பணியைத் தொடர்ச்சியாகக் கவனிக்கவும் வழியமைத்து, அதேநேரத்தில், திருமண விழாவும் சிறப்பாக நடைபெறும் அளவுக்கு இந்தக் காணொலித் தொழில்நுட்ப வசதி நமக்கு வழி செய்திருக்கிறது!

நெருக்கடியான காலத்தில் எல்லாம், கழகத்திற்கு ஆறுதல் தருவதும், புது வலிமை சேர்ப்பதும், கழகத்தைச் சேர்ந்தவர்களின் இதுபோன்ற இல்லத் திருமணங்கள்தான். இந்த கொரோனா கால நெருக்கடியிலும், நீங்கள் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாக - நான் உங்களில் ஒருவனாக "நம்முடைய கழகக் குடும்பம்" என்ற பாசத்தோடு இந்தத் திருமண விழாவில் பங்கேற்கிறோம்.

“உதயசூரியன் மூலம் தமிழகத்தில் புதிய வெளிச்சம் பிறக்கப்போகிறது”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!

கொரோனா காலத்தைப் பயன்படுத்திக் கோடி கோடியாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், உலகத்திலேயே பழனிசாமி தலைமையிலான ஆட்சி மட்டும் தான் கொரோனாவை வைத்து “புதிது புதிதாக என்னவெல்லாம் ஊழல் செய்யலாம்” என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அதிலும், நமது ஒன்றியக் கழகச் செயலாளர் சந்திரனின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறாரே, அவரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பரிசோதனைக் கருவியிலேயே ஊழல் பரிசோதனையை வெற்றிகரமாக செய்து, கோடி கோடியாகக் குவித்துக் கொண்டிருக்கிறார். ஊழலையே திருமணம் செய்துகொண்டு, ஊழலுடனேயே இல்லறம் நடத்தி, ஊழல் குழந்தைகளைக் கட்டுப்பாடின்றிப் பெற்றுக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க ஆட்சி!

அவர்களின் இந்த ஊழல் தேனிலவு - ஊழல் குடித்தனம் எல்லாம் இன்னும் ஆறு மாதங்கள்தான். அதன்பிறகு, புதுக்கோட்டை மட்டுமல்ல, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் நிலைமை மாறும். தமிழ்நாட்டிற்கு புதிய வெளிச்சம் பிறக்கும்! பத்தாண்டுகளாகச் சூழ்ந்திருக்கும் இருட்டில் இருந்து மீண்டு, உதயசூரியனின் வெளிச்சத்தைக் காணத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

“உதயசூரியன் மூலம் தமிழகத்தில் புதிய வெளிச்சம் பிறக்கப்போகிறது”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!

இருண்ட ஆட்சி தொடர வேண்டும் என விரும்புவோர் இரண்டு தரப்பினர் மட்டும்தான். ஒன்று - பழனிசாமியும், அவருடைய ஆட்சியில் கொள்ளை அடிப்பவர்கள். இரண்டு - எடப்பாடி பழனிசாமியையும் அவருடைய கொள்ளைக் கூட்டத்தையும் இயக்கி வரும் மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்கள்.

ஏனென்றால், தலையாட்டி பொம்மைகளின் ஆட்சி தமிழ்நாட்டில் தொடர்ந்தால்தானே, நீட் தேர்வு மூலம் ஏழை மாணவர்களுடைய மருத்துவக் கனவைத் தகர்த்து - கோச்சிங் செண்டர் எனும் பெயரில் அவற்றை நடத்தும், தங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபத்தைச் சம்பாதிக்க முடியும்!

இதோ இந்த மணமேடையில் அமர்ந்திருக்கின்ற மணமக்கள் இருவருமே பி.இ. படித்திருக்கிறார்கள், அதுபோல பல்லாயிரம் பொறியாளர்களை உருவாக்கிய பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்சிறப்பு அந்தஸ்து எனச் சொல்லி, அதனை அபகரிக்க முடியும். வேளாண் திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துத் தங்களுக்கு வேண்டியவர்கள் கைகளில் நிலங்களை ஒப்படைக்க முடியும். மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொள்ள முடியும். ஊழல் எனும் பெயரில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடங்கி, தலைமைச் செயலகம் வரை ரெய்டு நடத்தி, அதைக் காட்டி மிரட்டியே, தாங்கள் நினைப்பதைச் சாதித்துக் கொள்ள முடியும். இதுபோன்ற மோசடி வேலைகள் நடப்பதற்கு இருட்டுதானே வசதி. அதனால்தான், இந்த இருண்ட ஆட்சி தொடர வேண்டும் என்று மத்தியில் இருப்பவர்கள் விரும்புகிறார்கள்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் வழங்கப் போகும் தீர்ப்பை எவராலும் மாற்ற முடியாது. தெளிவான தீர்ப்பை - திடமான தீர்ப்பை - உறுதியான தீர்ப்பை - உதயசூரியனுக்கு ஆதரவான தீர்ப்பைத் தமிழக மக்கள் வழங்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள். அதைச் சிந்தாமல், சிதறாமல் ஒருங்கிணைத்துப் பெற வேண்டிய கடமையும், பொறுப்பும் கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், நகரக் கழகம் - பேரூர்க் கழகம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. உங்களில் ஒருவனான நான் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் சுமந்திருக்கிறேன்.

“உதயசூரியன் மூலம் தமிழகத்தில் புதிய வெளிச்சம் பிறக்கப்போகிறது”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!

ஒன்றியக் கழகச் செயலாளர் சந்திரன் போன்றவர்களின் கழகப் பணி உதயசூரியனை உதிக்கச் செய்யும்! அவர், இன்று நேற்றல்ல; நாற்பதாண்டுக்காலமாகக் கழகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஜமால் முகமது கல்லூரி மாணவராக இருந்தபோதே கழக மாணவர் அணியின் அமைப்பாளராக இருந்தவர். என் தலைமையில் இளைஞரணி செயல்பட்டபோது, அன்னவாசல் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக இரண்டு முறை சிறப்பாகச் செயல்பட்டவர்.

அவருடைய உழைப்பின் காரணமாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த அன்னவாசல் ஒன்றியக் கழகச் செயலாளர் என்று ஒவ்வொரு பொறுப்பாக உயர்ந்து, ஒவ்வொன்றிலும் பொறுப்புடன் செயல்பட்ட காரணத்தால் கழகத் தொண்டர்களிடமும் - பொதுமக்களிடமும் நன்மதிப்பினைப் பெற்று, கூட்டுறவு வங்கித் தலைவர், அன்னவாசல் ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், பால்வளத் தலைவர் என, பல பொறுப்புகளில் சிறப்பாகச் செயலாற்றியிருக்கிறார். பொறுப்புகளை எப்படி ஏற்றுக்கொண்டாரோ - அதுபோலவே கழகம் அறிவித்த போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறைவாழ்வையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டவர்.

ஈழத்தமிழர் நலன் காக்கும் போராட்டம், இந்தித் திணிப்பை எதிர்த்துச் சட்ட எரிப்புப் போராட்டம் ஆகியவற்றில் சிறைச்சாலையைப் பூஞ்சோலையாக எதிர்கொண்டவர். அத்தகைய ஆற்றல் மறவரான சந்திரனின் திருமணத்தை நான் தலைமையேற்று நடத்தி வைத்தேன். இன்று அவருடைய இளைய மகன் இளையசூரியன் திருமணத்தையும் நடத்தி வைக்கிறேன். 2014-ல் சந்திரனின் மூத்த மகன் இளஞ்சேரன் திருமணத்தை நம் உயிருடன் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்கள்.

“உதயசூரியன் மூலம் தமிழகத்தில் புதிய வெளிச்சம் பிறக்கப்போகிறது”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!

இந்த இயக்கத்தைப் பார்த்து, குடும்பக் கட்சி என்று சொல்பவர்களுக்கு, இந்த கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் எங்கள் குடும்பம்தான் என்று பதில் சொல்கின்ற பேரியக்கம் இது. குட்கா ஊழலுக்கும் - குவாரி காண்ட்ராக்ட்டுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பயன்படுத்துவோருக்கு இதன் அருமை தெரியாது. கரைவேட்டியும் கருப்பு - சிவப்பு துண்டும்தான் நமது நிரந்தர முகவரி. நாம் தி.மு.க.காரர்கள் என்பதுதான் நமது அசையாச் சொத்து. நம்மையோ இந்த இயக்கத்தையோ எவராலும் அசைக்கவும் முடியாது. ஆட்டவும் முடியாது.

மணமகள் காவினிப்பிரியாவால், இன்று மணமகன் இளையசூரியனுடைய வாழ்விலே புது ஒளி பிறந்திருக்கிறது. விரைவில், உதயசூரியனால் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் புது ஒளி பிறக்கும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories