மு.க.ஸ்டாலின்

“2 வழக்குகள் மட்டுமல்ல; 2000 வழக்குகள் போட்டாலும் கவலையில்லை” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

விவசாயிகளைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக இயங்கி வருவதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

“2 வழக்குகள் மட்டுமல்ல; 2000 வழக்குகள் போட்டாலும் கவலையில்லை” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் சகோதரர் ராஜ்குமாரின் மகன் டாக்டர் ஸ்ரீராம் சுப்பையா - டாக்டர் சாருஹாசினி திருமணம் இன்று நடைபெற்றது. இந்தத் திருமண விழாவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

மணமக்களை வாழ்த்திப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசியதாவது :

“இங்கு சகோதரர் திவாகரன் பேசியதைக் கேட்டு நீங்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியைத் தெரிவித்தீர்கள். அதற்குப் பிறகு பேசிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட அதை வலியுறுத்தி குறிப்பிட்டுச் சொன்னார்கள். நேரு பேசும்போது சொன்னார்; இப்படித்தான் புதுக்கோட்டையில் பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த அரசகுமார் பேசினார். பேசிவிட்டு ஒரு வாரத்தில் தி.மு.கவில் வந்து சேர்ந்துவிட்டார்.

இன்று திவாகர் பேசி உள்ளார். அவர் எங்கே போகிறார். எங்கே வருகிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவர் எடுக்க வேண்டிய முடிவு. ஆனால், அவர் பேசும்போது, 'கட்சி பாகுபாடின்றி, அ.தி.மு.க, தி.மு.க என்று பாராமல் தமிழ்நாட்டைக் காப்பாற்ற தமிழன் என்ற உணர்வைப் பெற்றாக வேண்டும்' என்று குறிப்பிட்டார். அதைத்தான் நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

“2 வழக்குகள் மட்டுமல்ல; 2000 வழக்குகள் போட்டாலும் கவலையில்லை” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டில் தற்போது ஓர் ஆட்சி நடைபெறுகிறது. அதை ஆட்சி என்று சொல்வதை விட காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். அதை மாற்றுவதற்கான தேர்தலை விரைவில் நாம் சந்திக்க இருக்கிறோம். 2021ல் தேர்தல். சரியாக 17 மாதங்கள்தான் இடையில் உள்ளன. இடையில் இருக்கும் இந்தக் காலக்கட்டத்தை நாம் எப்படி பயன்படுத்தப் போகிறோம்? நாட்டில் என்ன நிலைமை? உள்ளாட்சித் தேர்தலில் நாம் சற்றே அலட்சியமாக இருந்து விட்டதாகக்கூட திவாகரன் குறிப்பிட்டுச் சொன்னார். அதனால் ஆங்காங்கே சில தவறுகள், முறைகேடுகள் நடந்து தி.மு.கழகத்தின் வெற்றி தடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆனால், அலட்சியமாக இல்லாமல் கவனமாக இருந்ததால் தான் இந்த அளவுக்கேனும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதைத் திவாகரனுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இல்லையென்றால் இன்னும் மோசமாகப் போய் இருக்கும். அதுதான் உண்மை. விழிப்போடு நம்முடைய தோழர்கள் இருந்த காரணத்தால்தான், சில இடங்களில் அட்டூழியங்களைத் தடுத்து 65 சதவீதம் பெற்றியைப் பெற்றுள்ளோம். முறையாக நடந்திருந்தால், எண்ணி முடித்ததை முறையாக அறிவித்திருந்தால் கூட, 85 சதவீதம், 90 சதவீதம் நாம்தான் வெற்றி பெற்றிருப்போம்.

அதனால்தான் தொடர்ந்து நீதிமன்றத்தை நாம் நாடினோம். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களை நாடினோம். நீதிமன்றம் சென்றுதான் இந்த அளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்பது உண்மை. இல்லையென்றால் இன்னும் மோசமான நிலையிலே அநியாயங்கள், அக்கிரமங்கள் செய்து நம்முடைய இந்த வெற்றியைக் கூட தடுத்திருப்பார்கள்.

“2 வழக்குகள் மட்டுமல்ல; 2000 வழக்குகள் போட்டாலும் கவலையில்லை” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஆனால், மிக விழிப்புடன் அதை நாம் தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி என்பது, வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. அதனால்தான் இன்று ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள், விதவிதமான பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

2 நாட்களுக்கு முன்னர் என் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 வழக்குகள் என்ன, இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும், அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். தி.மு.கழகத்தினர் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்.

என் மீது வழக்குப் போடும் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவ படிப்புக் கனவை, நிறைவேற விடாமல் தடுக்கும் 'நீட்' தேர்வைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த ஆட்சிக்கு இருக்கிறதா? சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் போட்டோம். எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமனதாக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். அது என்னவாயிற்று என இதுவரை இந்த அரசு கேட்டிருக்கிறதா? இல்லை. 'நீட்' தேர்வே தமிழகத்திற்குள் வராது என சட்டமன்றத்தில் சொன்னார்கள். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் பேசினார்கள். ஆனால் தடுத்து நிறுத்தினார்களா? என்றால் இல்லை.

“2 வழக்குகள் மட்டுமல்ல; 2000 வழக்குகள் போட்டாலும் கவலையில்லை” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தஞ்சை டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் பல கொடுமைகளைச் சந்தித்து வருகிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 2 நாட்களுக்கு முன்னர் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். விவசாயிகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் சொன்னார்கள். ஆனால் தற்போது என்ன நிலை? சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் அனுமதி கேட்கவேண்டிய அவசியம் இல்லை என பட்டவர்த்தனமாக மத்திய அமைச்சர் பேசுகிறார். அதை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் இன்று நாடு போய்க்கொண்டிருக்கிறது. இதை டெல்டா பகுதியைச் சேர்ந்த மக்கள் நன்கு உணர்ந்து பார்த்து, உங்களுக்காக உழைக்கும், உங்களுக்காக பாடுபடும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்றும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

“2 வழக்குகள் மட்டுமல்ல; 2000 வழக்குகள் போட்டாலும் கவலையில்லை” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திராவிட இயக்கத்தின் குடும்பத்தில், இன்றைக்கு நம்முன் மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள், பழனிமாணிக்கமும், அவருடைய சகோதரர் ராஜ்குமாரும் எத்தகைய உறுதியுடன் கழகத்திற்குப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, அதே வழி நின்று, இந்த இயக்கத்திற்குப் பயன்படவேண்டும் என்று அன்போடு கேட்டு, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்து சொன்னதைப் போல, வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய் விளங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.”

இவ்வாறு உரையாற்றினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories