பீகார் மாநிலம், முசாப்பூரில் கடந்த 26 ஆம் தேதி 20 வயதான இளைஞரால், தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, உயர் சிகிச்சைக்காக பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆனால், அங்கு வெகுநேரம் அச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல், ஆம்புலன்சிலேயே காக்க வைக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது. உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் அச்சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, பீகாரில் ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர்கள், சிறுமியின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று பீகார் அரசு பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் சிறுமிக்கு நடந்த துயர சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டியது மிகவும் வெட்கக்கேடான செயல். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்காது . அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளியை கைது செய்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.