வட இந்தியாவில் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையை அங்கிருக்கும் அனைத்து கல்வி, கல்லூரி, தொழில் என அனைத்து நிறுவனங்களும் கொண்டாடும். அந்த வகையில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை வரும் மார்ச் மாதம் கொண்டாடப்படவுள்ளது.
இந்த சூழலில் மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹோலி பண்டிகை கொண்டாட அனுமதி மறுத்த காரணத்தினால், ஆசிரியர்களை மாணவர்கள் சேர்ந்து ஒரு அறையில் பூட்டி சிறை வைத்துள்ளனர். இந்த சம்பவம் பலர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஹோல்கர் என்ற அரசு கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 133 ஆண்டுகள் பழமையான இந்த கல்லூரியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலரும் படித்து வருகின்றனர். இந்த சூழலில் இங்கிருக்கும் ஒரு சில வகுப்பு மாணவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி ஒரு நபருக்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளனர். அந்த சமயத்தில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட அனுமதி இல்லை என்று தலைமை ஆசிரியர் தெரிவிக்க, அதற்கு பல ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாணவர்கள் எவ்வளவு கேட்டும் ஆசிரியர்கள் அனுமதி வழங்கவில்லை.
இதனால் கோபமடைந்த மாணவர்களில் சிலர், கடந்த பிப்.24-ம் தேதி ஆசிரியர்களை ஒரு அறையில் கூட்டி, அவர்களை உள்ளே அடைத்து பூட்டு போட்டு பூட்டி சிறை வைத்துள்ளனர். அதோடு அந்த அறைக்கு செல்லும் மின்சாரத்தையும் துண்டித்து, ஆசிரியர்களுக்கு எதிராக கோஷமும் எழுப்பியுள்ளனர். இதனால் ஆசிரியர்கள் கத்தி கூச்சலிடவே கல்லூரி பணியாளர்களில் ஒருவர், அந்த அறையின் ஜன்னல் வழியாக வெளியே வந்து அந்த பூட்டை திறந்து ஆசிரியர்களை விடுவித்துள்ளார்.
சுமார் அரை மணி நேரம் ஆசிரியர்களை மாணவர்கள் அறையினுள் பூட்டி சிறை வைத்த சம்பவம் குறித்து, விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் அக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் அனாமிகா ஜெயின் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.