முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை நடத்த கேரள அரசு தடையாக உள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கவும், பலப்படுத்தவும் ஏதுவாக மரங்களை நீக்கவும், சாலை அமைக்கவும் கேரள அரசு தடையாக இருப்பதாக வாதிட்டனர்.
அதற்கு நீதிபதிகள் இந்தப் பிரச்சனைக்கு இரு மாநில அரசுகளும் சமூக தீர்வு காண வேண்டும் என்று கூறினர். அணையை மேற்பார்வை இடுவதற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு தொடர வேண்டுமா அல்லது 2021 ஆம் ஆண்டு அணைகள் பாதுகாப்பு சட்டப்படி தற்போது அமைக்கப்பட்டுள்ள குழு தொடர வேண்டுமா என்பது குறித்து இரு மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர்.
மேலும், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்க எந்த பிரச்னையும் இல்லை. ஏற்கனவே 2 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே அது குறித்து ஆய்வு செய்யத் தேவை இல்லை என்று கருத்து தெரிவித்து, வழக்கு விரிவான விசாரணைக்கு பிப்ரவரி மூன்றாம் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.