துணை குடியரசு தலைவராகவும், மாநிலங்களவை தலைவராகவும் ஜெகதீப் தன்கர் உள்ளார். இவர் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளின் போது,எதிர்க்கட்சிகளை பேச அனுமதி கொடுக்காமல் இருந்து வருகிறார். அப்படியே பேச அனுமதி கொடுத்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் அனுமதி கொடுப்பதில்லை.
ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி கொடுக்கிறார். இவரது ஒருதலைபட்ச நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அரசியல் சாசனத்துக்கு எதிராகவும், விதிமுறைகளுக்கு மாறாகவும் செயல்படுகிறார்.
ஒன்றிய அரசின் செய்தி தொடர்பாளர் போன்று ஜெகதீப் தன்கர் நடந்து கொள்கிறார். இதனால்தான் மாநிலங்களவை தலைவரை நீக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளோம். நாடாளுமன்றம் முடங்குவதற்கு காரணமே மாநிலங்களவை தலைவர்தான். எதிர்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தால் அதனை நிராகரிக்கிறார். ஆனால் ஆளும் கட்சிக்கு அனுமதி கொடுக்கிறார்.
எதிர்கட்சி தலைவரான என்னை பேச அழைத்தால் 2 நிமிடம் கூட பேச விடாமல் தடுக்கிறார். இப்படி பல வகைகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒருசார்பாக செயல்பட்டு வருகிறார். எனவே தான் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் காப்பாற்ற இந்த நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.