டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என ஒன்றியத்தில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க பல சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு. இந்த வழக்கில்தான் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறை கைது செய்தது. இதே வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சிக்க வைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது. அமலாக்கத்துறையும் அரவிந்த கெஜ்ரிவாலுக்குச் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைத்து கைது செய்ய பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் கூடஆட்சியை கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் ரூ.25 கோடி பா.ஜ.க பேரம் பேசியுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டெல்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்தார். அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,”பாஜக அல்லாத மாநிலங்களில் பொய் வழக்குகள் மூலம் எதிர்க்கட்சிகள் உடைக்கப்படுவதையும், அரசுகள் கவிழ்வதையும் நாங்கள் பார்க்கிறோம். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்ய நினைக்கிறார்கள். பாஜக டெல்லி அரசை கவிழ்க்க துடிக்கிறது.
டெல்லி தேர்தலில் பாஜகவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கு தெரியும் .ஆம் ஆத்மி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ-வை கூட விலைக்கு வாங்க முடியாது. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாக இருக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.