இந்தியா

’அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது’ : தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

’அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது’ : தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறி அதில் சீர்திருத்தம் கொண்டு வருகிறோம் என ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது.

இந்த திட்டத்தின் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்குப் பிடித்த அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம். மேலும் தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் ரூ.1000 முதல் ரூ. 1 கோடி வரை விற்பனை செய்யப்பட்டது.

அதேநேரம் தேர்தல் பத்திரங்களை வாக்குபவர் பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. இந்த பத்திரத்தை 15 நாட்களுக்குள் பணமாக மாற்ற வேண்டும். இல்லை என்றால் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதிக்குச் சென்றுவிடும். இப்படியான சிக்கலும் இந்த தேர்தல் பத்திரத்திலிருந்தது.

இந்த தேர்தல் பத்திரம் முழுக்க முழுக்க பா.ஜ.க கட்சிக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் பா.ஜ.க. மட்டும் ரூ.5,272 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது மொத்த நிதியில் 58 சதவிகிதம் ஆகும். 2018 முதல் 2024 ஜனவரி மாதம் வரை ரூ.16,518 கோடி தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் பெரும்பான்மை நன்கொடை பாஜகவுக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது’ : தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்நிலையில்தான் தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை, எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை முழுவதும் நிறைவடைந்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.

மேலும், தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திர நன்கொடைக்கான நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதமானது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

தேர்தல் பத்திரங்களால் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களைத் தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஐ.டி சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் ரத்து என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதோடு,2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை வெயிட SBIக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் SBI வங்கி தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்றும் நன்கொடை கொடுத்தோர் விவரங்களைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் மார்ச்.13 ஆம் தேதிக்குள் வெளியிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories