இன்ஸ்டாகிரம் வந்த பிறகு பலரும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுப்பவர்களை போலிஸார் எச்சரிக்கை செய்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில், பைக் சாகத்தில் ஈடுபட்டுக் கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே அயன்ஷேக் மற்றும் சையத் ஜாவிக் ஷேக் ஆகிய இரண்டு வாலிபர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது இதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட அதை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பெரோஸ் பதான் என்ற பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இவர் வருவதைப் பார்க்காத இளைஞர்கள் வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருந்தபோது, அவரது வாகனத்தின் மீது மோதியுள்ளனர்.
இந்த விபத்தில் பெரோஸ் பதான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு இரண்டு இளைஞர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க அனுப்பிவைத்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.