பீகார் மாநிலம் பரௌஹ்னி நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டீசல் எஞ்சினை சிலர் மொத்தமாக திருடி சென்றது விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு முன்னதாக அதே பீகாரில் இரும்பு பாலத்தையே மொத்தமாக சிலர் திருடி சென்று விற்பனை செய்த்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பீகாரில் ஒரு அதிர்ச்சி திருட்டு சம்பவம் நடந்துள்ளது பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில தலைநகர் பாட்னா அருகில் இருக்கும் பிஹ்தா என்ற இடத்தின் வழியாக எண்ணெய் டேங்கர்களை எடுத்துக்கொண்டு ஒரு சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்துள்ளது.
அப்போது அந்த ரயில் ஒரு பாலத்தின் வழியாக சற்று மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது அதன் வேகத்துக்கு இணையாக சென்ற சிலர் தாங்கள் வைத்திருந்த புக்கெட் மூலமாக சரக்கு ரயிலில் இருந்து டீசல் திருடியுள்ளனர்.
இதனை பாலத்தின் கீழ் நின்றுகொண்டிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அதன் பின்னர் இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த சரக்கு ரயில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்துக்கு சொந்தமான டீசலை கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவைத் தொடர்ந்து பீகார் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். பீகாரில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.