இந்திய ராணுவத்தில் லான்ஸ் நாயக் பொறுப்பில் பணியாற்றியவர் கோபால் சிங். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையின் போது உயிரிழந்தார்.
அவரது வீரமரணத்திற்காக ராணுவம் இவருக்கு ‘சவுர்யா சக்ரா’ என்ற உயரிய ராணுவ விருதை அரிவித்துள்ளது. மேலும், அந்த விருதை சம்பந்தப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ராணுவம் தபாலில் அனுப்பியுள்ளது.
ராணுவத்தின் இந்த செயல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் தபாலில் அனுப்பிய அந்த விருதை ஏற்க அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அந்த விருதை ராணுவத்திடம் திரும்ப கொடுப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய ராணுவ வீரரின் தந்தை முனிம் சிங், எனது மகனுக்கு அளிக்கப்பட்ட விருது குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய தினங்களில் நாட்டின் குடியரசுத் தலைவர் கொடுக்க வேண்டிய விருது. அவ்வாறு செய்யமுடியவில்லை என்றால் , மூத்த ராணுவ அதிகாரிகள் ராணுவ வீரரின் குடும்பத்திடம் விருதை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஏதும் செய்யாமல் தபாலில் அனுப்பியுள்ளனர். இதனால் அந்த விருதை திருப்ப கொடுவவிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
விருதை ராணுவம் தபாலில் அனுப்பி இருக்கக் கூடாது. இது ராணுவ வழக்கத்தை மீறிய செயல் மட்டுமல்ல, ராணுவ வீரரின் வீரமரணத்தையும், அவரது குடும்பத்தையும் அவமதிக்கும் செயலாகும் என இணையவாசிகளும் விமர்சித்து வருகின்றனர்.