உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐ.நா. ஆதரவு பெற்ற அமைப்பு ஒன்று கடந்த 10 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்னதாக உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 5வது முறையாக பின்லாந்து மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் டென்மார்க், மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்து உள்ளது.
உலகின் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவுக்கு 16து இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 136வது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா 139வது இடம் பிடித்தது.
அதேபோல், உலகின் மகிழ்ச்சியற்ற நாடாக மீண்டும் ஆப்கானிஸ்தான் இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் லெபனான் உள்ளது. மேலும் செர்பியா, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 136வது இடம் கிடைத்துள்ளது குறித்து ஒன்றிய அரசை சமூகவலைதளத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில், “பசி தரவரிசை: 101, சுதந்திர தரவரிசை: 119, மகிழ்ச்சி தரவரிசை: 136... ஆனால், வெறுப்பு மற்றும் கோபத்திற்கான தரவரிசையில் விரைவில் முதலிடத்தைப் பெறுவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.