புதுச்சேரியை அடுத்த குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவருக்கு சந்திரலேகா என்ற பெண்ணுடன் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
பின்னர் அய்யனார் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கொரோனா காலத்தில் இவரது வேலை பறிபோனதால் சொந்த ஊருக்கு திரும்பினார். இதையடுத்து வேலை எதுவும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆன்லைன் டிரேடிங் செய்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என இவரின் நண்பர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இதனால் அய்யனார் மனைவியின் நகைகளை அடகுவைத்து ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்துள்ளார்.
ஆனால், டிரேடிங்கில் வருமானம் கிடைக்காததுடன் கடும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியின் நகைகளை மீண்டும் அடகு வைத்துள்ளார். அப்போதும் அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. 30 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு அவரது மனைவி தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த அய்யனார் கடந்த 24ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.