இந்தியா

“மன்னிப்பு கேட்க நாங்க என்ன சாவர்க்கரா?” : சஸ்பெண்ட் ஆன எம்.பி பா.ஜ.க அமைச்சருக்கு ‘பொளேர்’ பதிலடி!

மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது என சி.பி.ஐ எம்.பி பினோய் விஸ்வம் பதிலடி கொடுத்துள்ளார்.

“மன்னிப்பு கேட்க நாங்க என்ன சாவர்க்கரா?” : சஸ்பெண்ட் ஆன எம்.பி பா.ஜ.க அமைச்சருக்கு ‘பொளேர்’ பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சஸ்பெண்ட் ஆன 12 எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்ததற்கு, மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது என சி.பி.ஐ எம்.பி பினோய் விஸ்வம் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில், நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதங்களின்றி நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாகக் கூறி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.,க்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் உத்தரவிட்டார்.

இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் 6 பேர் காங்கிரஸ் எம்.பி.க்கள். திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தலா 2 பேர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் தலா ஒருவர்.

12 எம்.பிக்களும் நடப்பு கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் அறிவித்தார். இதனையடுத்து 12 எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதுதொடர்பாக இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர், மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 8 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், ராஜ்யசபா அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து 12 எம்.பி.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, 12 எம்.பி.,க்கள் மன்னிப்பு கோரினால், சஸ்பெண்ட் உத்தரவு குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? மக்கள் கருத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதற்காகவா மன்னிப்பு கோர வேண்டும்? மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்களில் ஒருவரான சி.பி.ஐயைச் சேர்ந்த பினோய் விஸ்வம், “தனியார்மயத்திற்கும், மக்கள் விரோத நடவடிக்கைக்கும் எதிராகவே குரல் எழுப்பினோம். மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories