நாம் அனைவரும் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள நூலகங்களைப் பார்த்திருப்போம். ஏன் இப்போது உணவகங்களில் கூட சிறிய நூலகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், கேரளாவில் ஒரு கிராமம் முழுவதும் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது புத்தக காதலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்திற்குட்பட்ட பெரும் குளம் கிராமத்தின் தெருக்களில் குருவிக் கூடுகள் போல் அலமாரிகள் செய்யப்பட்டு, அதில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கிராமம் முழுவதும் 11 இடங்களில் இதுபோல புத்தக அலமாரி வைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து கிராம மக்கள் புத்தகங்களை எடுத்துப் படித்து வருகிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கிராம மக்கள் பலர் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு, பிறகு அலமாரியில் வைத்துவிடுகின்றனர். மேலும் பலர் புத்தக அலமாரியின் அருகே அமர்ந்து படித்துவிட்டு மீண்டும் அங்கேயே வைத்து விடுகின்றனர்.
கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சகம் நேற்று தனது ட்விட்டரில், 'புத்தக கூடு' தொடர்பான வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கிராம மக்களைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த ஜூன் 19ஆம் தேதி, தேசிய வாசிப்பு தினத்தையொட்டி இந்த கிராமத்தைப் புத்தக கிராமம் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.