இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, வருங்கால வைப்பு நிதியிலிருந்து (EPF) முன்பணம் எடுக்கும் சிறப்புத் திட்டத்தைக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது.
இந்த திட்டத்தை கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் போதும் தொடர்ந்தது. இந்த திட்டத்தால் வேலை இழந்த பல தொழிலாளர்கள் வைப்பு நிதியை எடுத்துப் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தொழிலாளர்கள் வைப்பு நிதியிலிருந்து 37 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் மும்பையில் உள்ள பி.எஃப் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
கொரோனா காலத்தில் பணி இழந்ததாலோ அல்லது பி.எப் பணத்தை மாற்றாமல் இருந்ததாலோ கணக்கை ரத்து செய்யாமல் அதிலிருந்து ஒரு பகுதி எடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் இணையவழியில் பணத்தைக் கையாடல் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த முறைகேட்டுச் சம்பவத்திற்கு அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.