வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க விவசாயிகள் இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்யவேண்டும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த 17 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கும் அரசுக்குமிடையே இதுவரை 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு எட்டப்படவில்லை.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் ஓயாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என பா.ஜ.க அரசு பிடிவாதம் காட்டி வருகிறது.
இரண்டு வாரங்களைக் கடந்து தலைநகர் டெல்லியில் தொடர்ந்துவரும் விவசாயிகள் போராட்டத்தில், இதுவரை 15 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 11 விவசாயிகளின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
11 விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்துள்ள செய்தியைச் சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., “மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க விவசாயிகள் இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.