மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் அண்மையில் பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
அப்போது, “மக்களின் நலன் மீது அவர்களின் முன்னேற்றத்தின் மீது எள்ளளவும் பாஜகவுக்கு அக்கறை இல்லை. மாறாக மாநிலங்களில் உள்ள ஆட்சியை அபகரிப்பதையே வேலையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மோடி அரசு மாநிலங்களில் பல்வேறு வகையில் வன்முறைகளை கட்டவிழ்த்து வருகிறது. ஒரு புறம் கொரோனாவும், டெங்குவும் பெருந்தொற்றாக இருக்கிறது. மற்றொரு புறம் மிகப்பெரிய பெருந்தொற்றாக பாஜக தாக்கி வருகிறது. ஒரு தீய சக்தியாக பாஜக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் அரசியல் செய்வதாக இருந்தால் அதற்கு கலாசார அங்கமாக உள்ள சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். ஆனால் ஆட்சியை பிடிப்பதில் அவ்வளவு எளிதானது அல்ல என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.