இந்தியாவில் பெண்களுக்கு திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் 16 முதல் 18 வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்வதால், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகைக்கு பெண்கள் ஆளாவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதனால் இந்தியாவின் பெண்களின் திருமண வயது வரப்பை 20 - 21 ஆக உயர்த்தவேண்டும் என்று பெண்கள் அமைப்பினர், அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம், நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினர்.
அந்த உரையில், பெண்களின் திருமண வயதை 18லில் இருந்து உயர்த்த இருப்பதாகவும் இதற்கான அறிக்கையை விரைவில் அளிக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் இத்தகைய அறிவிப்பை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வரவேற்றுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கதக்கது.
இந்த நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.