புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏழுமலை கொரோனா தொற்று காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. இன்று அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவிற்கு 481 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
புதுச்சேரியின் ஊசுடு தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டவர் ஏழுமலை (54). கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உள்ளாட்சித் அமைச்சராக அவர் பதவி வகித்தார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழுமலை, சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். மாரடைப்பால் உரிழந்ததற்காக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கபட்டு முன்னாள் எம்.எல்.ஏ பாலன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.