கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க இடமில்லாத அவலநிலை உருவாகியுள்ளது. இதனால் சில இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கல்வி நிலையங்களிலும், மண்டபங்களிலும் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அதே அறையில் உயிரிழந்தவர்களின் உடலை பிளாஸ்டிக் கவரால் சுற்றி அருகேயே வைத்திருந்த காட்சிகள் பார்ப்போர் நெஞ்சங்களை உலுக்கியது. மேலும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனையடுத்து வெளியான தகவலில், மும்பை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சியோன் மருத்துவமனையில் அத்தகைய மோசமான சம்பவம் நடந்துள்ளது. அந்த மருத்துவமனையில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களையும், உயிரிழந்தோரின் சடலங்களையும் ஒரே இடத்தில் வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் செய்திகள் வெளியாகின. பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய, சியோன் மருத்துவமனையின் டீன் பிரமோத் இங்லே கூறுகையில்,
“சியோன் மருத்துவமனை பிணவறையில் 15 பிரிவுகள் உள்ளன. இப்போது கொரோனா பாதிப்பு காரணமாக 11 பிரிவுகள் சடலங்களால் நிரம்பிவிட்டன. மீதமிருக்கும் பிணவறைகளில் பிற நோயாளிகளால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனால் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சடலங்களையும் பிணவறைக்கு மாற்றினால் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு பிரச்சனை ஏற்படும்.
அதுமட்டுமல்லாது கொரோனா நோயாளிகளின் சடலங்களை அவர்களது உறவினர்கள் வாங்க மறுக்கின்றனர். நாங்கள் முடிந்தவரை சடலங்களை அப்புறப்படுத்திவிட்டோம். மேலும் இந்த பிரச்னையில் அரசு தான் முடிவு எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இதுதொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு மும்பை மாநகராட்சி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.