நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்று சமூகப் பரவல் அளவிற்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக தேசிய ஊரடங்கு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மே 3 வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
ஊரடங்கு கொரோனாவில் இருந்து காப்பாற்ற வழி வகுத்துவிடும். ஆனால், தினக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாகவே பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து, அவர்களுக்கான அன்றாட உணவு மற்றும் நிவாரணங்களை அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி காணொளிக் காட்சி மூலம் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஊரடங்கால் மட்டுமே கொரோனா பரவுவதைத் தடுத்துவிட முடியாது. பரிசோதனைகளை பெருமளவு அதிகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அவர் பேசியதன் முழு விவரம் :
கொரோனா தொடர்பாக நிபுணர்களிடம் ஆலோசித்ததில், ஊரடங்கு வைரஸ் பரவலை தாமதமாக்குமே தவிர தீர்வாகி விடாது. இது தொடர்பாக, நான் முன்வைக்கும் கருத்துகள் எதையும் விமர்சனங்களாக எடுத்துக்கொள்வதை விடுத்து, அட்வைஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஊரடங்குடன் சேர்த்து நாடு தழுவிய பரிசோதனைகளை அரசு உடனடியாக விரிவுபடுத்த வெண்டும். இதன் மூலம் தொற்று பரவும் ஹாட் ஸ்பாட்களை கண்டறிந்து மேலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும்.
ஒரு லட்சம் பேரில் 199 பேருக்குதான் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 72 நாட்களில் ஒரு மாவட்டத்துக்கு 350 என்கிற அளவிலேயே கொரோனா சோதனை நடைபெற்றுள்ளது. இந்த குறைந்த அளவிலான சோதனைகள் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாது.
ஒருவர் பாதிக்கப்பட்ட பிறகுதான் கொரோனா சோதனை நடத்தப்படும் இந்த முறையை மாற்ற வேண்டும். நாம் வைரஸுக்கு எதிரான போரில் போராடித்தான் வெற்றியைக் காணவேண்டும்.
ஊரடங்கால் முடங்கியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கையை அரசு கையில் எடுக்க வேண்டும். இதற்காக மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். அரசின் முடிவுகள் அனைத்தும் நாட்டு மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.
இந்த இக்கட்டான சூழலில் அரசியல் செய்யவோ, சண்டை போட்டுக்கொள்ளவோ நேரம் இல்லை. இதுவரை பரிசோதனைகள் வேகமாக நடக்கவில்லை என்றால் இனியாவது அதில் வேகம் பெற வேண்டும். நாடு பொருளாதார ரீதியில் பெருமளவு பின்னடைவை சந்திக்க இருக்கிறது என்பதை அரசு உணர வேண்டும்.
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற பிற மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.