கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் எதற்கும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கால் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த 1,500 பேர் தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். கடந்த 15 நாட்களில் 700 பேர் சிறப்பு விமானம் மூலம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள பிரபல சுற்றுலா தலமான தபோவன் கங்கை ஆற்றங்கரையில் இஸ்ரேல், ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டினர், ஊரடங்கு விதிகளை மீறி தேவையின்றி நடமாடி உள்ளனர்.
அப்பகுதியில் ரோந்து சென்ற போலிஸார் அவர்களிடம் விசாரித்தபோது, காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக தாங்கள் எண்ணியதாகக் கூறியுள்ளனர்.
இதையடுத்து, ஊரடங்கு உத்தரவை விளக்கிய போலிஸார், “நான் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்கவில்லை. என்னை மன்னிக்கவும் ” என 500 முறை பேப்பரில் எழுதிக் கொடுக்குமாறு நூதன தண்டனை கொடுத்துள்ளனர்.
மேலும், மீண்டும் இதுபோன்று ஊரடங்கை மீறி வெளியே நடமாடினால், மீண்டும் இந்தியாவுக்கு வர முடியாதபடி கருப்பு பட்டியலில் பெயர் சேர்க்கப்படுமென அனைவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.