இந்தியா

“இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது” : பா.ஜ.க அரசைச் சாடிய கே.எஸ்.அழகிரி!

“எல்.சி.ஐ-யை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவைக் கைவிடாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் கே.எஸ்.அழகிரி.

“இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது” : பா.ஜ.க அரசைச் சாடிய கே.எஸ்.அழகிரி!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலனாகச் செயல்பட்டு வந்த எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பதை மத்திய பா.ஜ.க அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் எத்தகைய பொருளாதாரப் பாதையில் பயணம் மேற்கொள்வது என்பது குறித்து தெளிவான பார்வையும், புரிதலும் இல்லாத காரணத்தால் பல தடுமாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய பா.ஜ.க அரசின் அவலநிலை குறித்து படம் பிடித்து காட்டியிருப்பதை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையை எந்த மத்திய அரசும் இதுவரை புறக்கணித்ததில்லை. ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதில் கூறப்பட்டுள்ள பல தகவல்களை கண்டும், காணாமல் இருந்தது பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மத்திய பா.ஜ.க அரசின் நிதிநிலை படுபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது குறித்து நிதி ஆயோக் பல யோசனைகளைத் தெரிவித்துள்ளது. 2019-20ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மதிப்பில் ரூபாய் 90 ஆயிரம் கோடியை விற்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2017-18இல் மத்திய பா.ஜ.க அரசு ரூபாய் 1 லட்சம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ரூபாய் 1 லட்சத்து 546 கோடி மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதை மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை என்று சொல்வதா? பொதுத்துறை என்பது மத்திய அரசின் சொத்து. மக்களின் சொத்து. அதை தனியாருக்கு அடிமாட்டு விலையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதை விட ஒரு மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்நிலையில் 1956ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் நேரு எடுத்துக்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) உருவாக்கப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்தபோது உள்கட்டமைப்பு வசதிகளோ, கனரக தொழில்களோ தொடங்க நிதி பற்றாக்குறை இருந்தது. இந்த நிதியுதவியைக் கொண்டு பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி, அவற்றை இந்தியாவின் கோயில்கள் என்று பிரதமர் நேரு மகிழ்ச்சி பொங்க கூறியதை எவரும் மறந்திட இயலாது.

“இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது” : பா.ஜ.க அரசைச் சாடிய கே.எஸ்.அழகிரி!

ஆயுள் காப்பீடு என்பது நீண்டகாலத்திற்கானது என்பதால் மக்களின் பணம் அதிக காலம் காப்பீட்டு நிறுவனத்திடம் இருக்கும். அந்த வகையில் ரூபாய் 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி., 2018-19 ஆம் ஆண்டு அரசுக்குரிய 5 சதவீத லாப பங்காக ரூபாய் 2610 கோடியை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. மேலும் இந்தியாவின் ஐந்தாண்டு திட்டங்களுக்கு இதுவரை ஏறக்குறைய 35 லட்சம் கோடி ரூபாய் எல்.ஐ.சி. நிறுவனம் நிதி திரட்டி வழங்கியுள்ளது.

இப்படி மிக உயர்ந்த நோக்கத்தோடு நேருவால் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது மக்களின் சொத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு சமமாகும். மோடி அரசு இதைத் தவிர ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு முதலீடாக எல்.ஐ.சி வழங்கி வருகிறது. இந்தியாவின் காமதேனுவாக கருதப்படுகிற எல்.ஐ.சி. நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து அதன் பாலிசிதாரர்கள், ஊழியர்கள் ஆகியோர் மிகுந்த பதற்றத்துடனும், அச்சத்துடனும் இருந்து வருகின்றனர்.

எல்.ஐ.சி-யின் மிகச் சிறந்த செயல்பாட்டின் காரணமாக தனியார் காப்பீட்டு நிறுவனங்களோடு கடுமையான போட்டி இருந்தாலும் 2018-19 ஆம் நிதியாண்டில் பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ள தொகை ரூபாய் 1.63 லட்சம் கோடி. பணம் பெற்றவர்கள் 2.6 கோடி பேர். 134 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டில் 30 கோடி பாலிசிதாரர்களைக் கொண்ட எல்.ஐ.சி. நிறுவனத்தின் தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் சிதைத்து தனியாருக்கு தாரை வார்ப்பதை இந்திய குடிமக்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

“இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது” : பா.ஜ.க அரசைச் சாடிய கே.எஸ்.அழகிரி!

2000ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின் 20 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கடுமையான போட்டியை உருவாக்கியும், ஆயுள் காப்பீட்டுத் துறையில் மட்டும் சராசரியாக 1 சதவிகித சந்தைப் பங்கை மட்டுமே கொண்டிருக்கின்றன. இதை பார்க்கிற போது இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே நிறுவனமாக எல்.ஐ.சி விளங்கி வருகிறது.

2018-19ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் திட்டமிட்டதை விட ரூபாய் 1.7 லட்சம் கோடி குறைவாகவே உண்மையான வருவாய் வந்துள்ளது. இதனால் தான் இந்திய பொருளாதாரம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலனாக, உற்ற தோழனாக செயல்பட்டு வந்த எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பதை மத்திய பா.ஜ.க அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories