குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அதனை குறுக்கு வழியில் நடைமுறைப்படுத்த மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்த மேற்கு வங்கம், கேரளா மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டன.
இருப்பினும், மத்திய பா.ஜ.க அரசு சர்வாதிகாரப் போக்கில் இருந்து பின்வாங்காமல் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் திண்ணமாக உள்ளது. இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கேட்டு வரும் விண்ணப்பங்கள் மாஜிஸ்திரேட் மூலம் பரிசீலிக்கப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டது.
தற்போது பல மாநிலங்கள் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் முன்னதாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பிக்கும் முறையை நீக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக, குடியுரிமை கேட்டு வரும் விண்ணப்பம் தொடர்பான பரிசீலனைகள், ஆய்வுகள் அனைத்தும் இணையவழியில் முடிந்து, இணைய வழியிலேயே குடியுரிமை வழங்க திட்டமிடப்படுகிறது. இதில், மாநில அரசுகளின் தலையீடு எந்த இடத்திலும் இருக்காது என்று மோடி அரசு கருதுகிறது.