எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்பை மீறி தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதை அடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் பெறப்பட்ட பிறகு இந்த சட்டத்தை அமல்படுத்தவுள்ளது அரசு.
இந்நிலையில், அசாம், திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், நாட்டில் பிற மாநிலங்களிலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் மும்பையைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிராக உள்ளது மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா. இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து என்னுடைய பணியை ராஜினாமா செய்துள்ளேன். நாளை முதல் தான் அலுவலகத்துக்குச் செல்லப்போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடியுரிமை மசோதா இஸ்லாமியர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டை பிளவுபடுத்தும் விதமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அப்துர் ரஹ்மான், சகோதரத்துவத்துடன் ஒன்றுபட்டு இருக்கும் இந்தியர்களை இந்த மசோதா மூலம் பிரிக்க முயல்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்துர் ரஹ்மானின் ராஜினாமா இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், அவரது இந்த எதிர்ப்பு, நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.