மேற்கு வங்கத்தில் அரசின் நலத்திட்டங்களை பெற்றுத் தருவதற்காக மக்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் லஞ்சமாகப் பெற்று வந்துள்ளனர். இது அம்மாநில மக்களிடையே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மீது பெருத்த அதிருப்தியை உண்டாக்கியது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மோடியும், அமித்ஷாவும் இந்த விவகாரத்தை முக்கிய அம்சமாக கையில் எடுத்து மேற்கு வங்கத்தில் பேசினர். இது மக்களவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக மம்தா கருதுகிறார்.
இந்த நிலை தொடர்ந்தால் அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் பெருத்த அடி வாங்கவேண்டியிருக்கும் என்பதை தனது கட்சியைச் சேர்ந்தவர்களிடம் காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார் மம்தா. மேலும், மக்களிடம் கமிஷனாக பணத்தைப் பெற்றவர்கள் அவர்களிடமே திருப்பித்தருமாறு உத்தரவிட்டார். திருப்பித் தரத் தவறினால் சிறைசெல்ல நேரிடும் எனவும் எச்சரித்தார்.
மம்தா பானர்ஜியின் உத்தரவையடுத்து, மேற்கு வங்க மக்கள் தாங்கள் லஞ்சமாகக் கொடுத்த பணத்தை உரியவர்களைச் சந்தித்து பணத்தை திருப்பிக் கேட்டு வந்தனர். இந்நிலையில், திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் திரிலோஷன் முகர்ஜி 2.25 லட்சம் ரூபாய் பணத்தை பிர்பம் மாவட்டத்தின் சத்ரா கிராமத்தைச் சேர்ந்த உரியவர்களிடம் திருப்பி அளித்துள்ளார்.
பாதாளச் சாக்கடையை சீர்படுத்தும் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட மக்களிடம் இருந்து தலா ரூ.1600 வீதம் பிடித்து வைத்திருந்த அவர் அந்தப் பணத்தை தற்போது திருப்பிக் கொடுத்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் லஞ்சமாகப் பெற்றது குறித்து விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.