மோடி தேர்தல் பரப்புரையின் போது பயங்கரவாதிகளுக்கு எதிராக பா.ஜ.க ஆட்சி செயல்பட்டதாகவும், பா.ஜ.க ஆட்சியில் தான் "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" நடைபெற்றதாகவும் கூறிவந்தார். இதற்கு காங்கிரஸ் சார்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில் 2016-ல் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தலைமையேற்று நடத்திய ஓய்வுபெற்ற லெஃப்டினெண்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற லெஃப்டினெண்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா ஜெய்ப்பூரில் செய்தியாளர் கள் சந்திப்பின் போது; “ பலரும் கூறுவது போல சர்ஜிக்கல் ஸ்டிரைக் கடந்த காலங்களில் கூட ராணுவத்தால் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை நடைபெற்ற இடங்களும், தேதிகளும் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, தேர்தல் காலங்களில் ராணுவத்தை தங்கள் கட்சிக்காகப் பயன்படுத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், சர்ஜிக்கல் ஸ்டிரைக் இந்த தேர்தலில் அதிக அளவில் அரசியல் ஆக்கப்பட்டுவிட்டதாகவே நான் பார்க்கிறேன். இராணுவம் குறித்துப் பேசும் போது நாட்டின் நலன்களை அரசியல்வாதிகள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மக்களும் இராணுவ செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நேற்று முன் தினம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தில் 6 சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் நடத்தப்பட்டன எனவும், ஆனால் அதனைக் காங்கிரஸ் கட்சி அரசியலாக்கவில்லை என்றும் அக்கட்சி தெரிவித்தது. இதற்குப் பிரதமர் மோடி உட்பட பாஜகவினர் காங்கிரஸ் ஆட்சியில் துல்லிய தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை என தெரிவித்த நிலையில் முன்னாள் ராணுவ அதிகாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.