தி.மு.க

தமிழக விவசாயிகளை காப்பாற்ற ‘காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்’ -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

வறட்சி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் என பன்முகத் தாக்குதல்களிலிருந்து டெல்டா விவசாயிகளை காப்பாற்றுவதற்காக இன்று நடக்கவிருக்கும் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

தமிழக விவசாயிகளை காப்பாற்ற  ‘காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்’ -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் ஆட்சியாளர்களால் விவசாயிகள் அனுபவித்து வரும் பன்முகத் தாக்குதல் குறித்து இன்று நடக்க இருக்கும் கருத்தரங்கத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''மத்திய, - மாநில அரசுகளின் அலட்சியப் போக்கின் காரணமாக, கடந்த ஏழாண்டு காலத்திற்கும் மேலாக, காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு கொண்டிருக்கின்றன. தொடர்ந்து குறுவை சாகுபடி செய்ய முடியாமலும், உரிய நேரத்தில் மேட்டூர் அணை நீர்ப்பாசனத்திற்குத் திறந்து விடப்படாமலும் ஆளும் மத்திய பா.ஜ.க. மற்றும் மாநில அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் காலியாகி, விவசாயமும், விவசாயத் தொழில்களும் முழுமையாக நலிவடைந்து விட்டன. அதனால் விவசாயிகள் தற்கொலையும், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேறு வேலை தேடி அண்டை மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்லும் அவல நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், காலம் காலமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கிவரும் காவிரிப்படுகை பகுதிகளில் இதுவரை எந்த அரசாங்கமும் விளைவிக்காத கேடாக, இன்றைய மத்திய அரசு வளமான விவசாய பூமியை மலடாக்கும் முயற்சியான ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் ஆகிய திட்டங்களை அறிவித்து, அதனை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, அதன்மூலம் காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கிட முயற்சி நடைபெற்று வருகிறது.

காவிரி டெல்டா விவசாயிகளின் இத்தகைய அவல நிலையை போக்கிடவும் - காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவித்திடக் கோரியும், இன்று (ஆக.,28) காலை முதல் இரவு வரை, தஞ்சாவூர் மகாராஜா திருமண மண்டபத்தில் "மாபெரும் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்" நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கத்தின் நிறைவுப் பேருரையினை தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், எம்.எல்.ஏ., அவர்கள் தலைமை வகித்திட - தஞ்சை எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி., திருவிடைமருதூர் செ.இராமலிங்கம் எம்.பி., மற்றும் தி.மு.க. விவசாய அணிச் செயலாளர்கள் டாக்டர் கே.பி.இராமலிங்கம், கரூர் ம. சின்னசாமி ஆகியோர் அவர்கள் முன்னிலை வகித்திட - திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., அவர்கள் தொடக்க உரை ஆற்றிட - கழக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார். கருத்தரங்க முடிவில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., நன்றியுரை ஆற்றுகிறார்.

இக்காவேரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கத்தில் காவிரி டெல்டா பகுதி மாவட்டக் கழகச் செயலாளர்களான கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வெ.கணேசன் எம்.எல்.ஏ., நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன், நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என்.கௌதமன், புதுக்கோட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.இரகுபதி எம்.எல்.ஏ., புதுக்கோட்டை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ., திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் ந.தியாகராஜன், அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன், புதுச்சேரி-காரைக்கால் மாநில அமைப்பாளர் ஏ.எச்.எம். நாஜிம், உ.மதிவாணன் எம்.எல்.ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., எம்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ., சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., எ.சௌந்திரபாண்டியன் எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.இராஜா எம்.எல்.ஏ., கோவி.செழியன் எம்.எல்.ஏ., ப.ஆடலரசன் எம்.எல்.ஏ., ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ., துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ., சபா.இராஜேந்திரன் எம்.எல்.ஏ., காரைக்கால் கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இக்கருத்தரங்கத்தில், தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாயச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துரை வழங்குவார்கள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories