வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியின் ‘அசுரன்’ படம் 50வது நாளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதன்முறையாக தனுஷின் படம் 100 கோடி வசூலை எட்டியுள்ளது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்திலான ‘பட்டாஸ்’ படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜுடனும், பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் இயக்கத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார்.
இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பெயர் ‘சுருளி’ என சமூக வலைதளத்தில் செய்திகள் பரவின. ஆனால் அதற்கு கார்த்திக் சுப்புராஜ் தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது. மேலும், இதுவரை D40 என்றே அழைக்கப்பட்டு வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் இடைவிடாமல் 64 நாட்களாக லண்டனில் நடைபெற்று அண்மையில் முடிவடைந்திருக்கிறது.
இந்நிலையில், மாரி செல்வராஜும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் லண்டன் சென்றுள்ளனர். அப்போது தனுஷிடம் கதையைச் சொல்லி ஓகே வாங்கியுள்ளார் மாரி செல்வராஜ். மேலும் படத்துக்கு ’கர்ணன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் டிசம்பர் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.