உலகம்

முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.

மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர். மேலும் காசா பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்து,கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசா நகரின் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கி அதன் பல்வேறு பகுதிகளை கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சிகளை எடுத்துவந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த 20 பரிந்துரைகளை முன்வைத்து, இதனை ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கைக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர் என டிரம்ப் கூறியுள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில், "இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் பணயக்கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள், இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக்கொண்ட எல்லை வரை திரும்பப் பெறும்"என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஒப்பந்தம் காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும். ஆக்கிரமிப்புப் படைகள் முழுமையாக திரும்பப் பெறுவதை உறுதி செய்து, மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும். மேலும் கைதிகள் பரிமாற்றத்தை செயல்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.