உலகம்
"காசா பகுதி முழுவதும் வெடித்துச் சிதறும்"- ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர்.
இதனிடையே 15 மாதம் தொடர்ந்த இந்த போரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேலும், பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 18 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்த நிலையில், அதற்கு பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் 300க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது.
இதனிடையே இஸ்ரேல் போர் நிறுத்த உடன்பாடுகளை மீறுவதாகவும், இதன் காரணமாக மீதம் இருக்கும் பிணைக்கைதிகளை விடுவிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. இதற்கு இஸ்ரேல் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால்,காசா பகுதி முழுவதும் வெடித்துச் சிதறும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்துப் பேசிய டிரம்ப், "இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இதனை ஹமாஸ் அமைப்பு மீறுகிறது
வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் காசாவிலிருந்து மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு காசா பகுதி முழுவதும் வெடித்துச் சிதறும். ஏற்கெனவே விடுவிக்க திட்டமிடப்பட்ட பலர் இறந்துவிட்டதாக அச்சம் இருக்கிறது"என்று கூறியுள்ளார். முன்னதாக காசாவை முழுமையாக அமெரிக்காவுக்கு சொந்தமாகப்போவதாக டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!