உலகம்
"காசாவில் எங்கள் சகோதரர்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது" - சவூதி அரேபியா காட்டம் !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காசா மீதான தாக்குதல் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை என சவூதி அரேபியா விமர்சித்துள்ளது. சவூதி அரேபியாவில் அரபு லீக்கும், இஸ்லாமிய மாநாடு அமைப்பும் இணைந்து கூட்டு உச்சி மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முக்கிய அரபு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சவூதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான், "எங்கள் பாலஸ்தீனிய சகோதர மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளும், லெபனானில் நடத்தப்படும் ஆக்கிரமிப்புகளும் எங்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை.
அல் அக்ஸா இருக்கும் கிழக்கு ஜெருசலமை தலைநகரமாகக் கொண்டு, பாலஸ்தீன் அரசை நிறுவாதவரை இஸ்ரேலுடன் வெளிப்படையான உறவு கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்ரேல் நடத்தும் இந்த போர் உடனடியாக நிறுத்திக்கொள்ளப்படவேண்டும்" என்று கூறினார்.
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-விற்கு ஒரு MP சீட் ஒதுக்கீடு!
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!
-
இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!