உலகம்
லெபனானின் முக்கிய நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு : காரணம் என்ன ?
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதலும் நடத்தி வருகிறது .
அவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். அது மட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பின் உச்சபட்ச தலைவரும் அந்த அமைப்பின் பொதுசெயலாளருமான ஹசன் நஸ்ருல்லாவும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லாவின் வாரிசாக கருதப்பட்டரும், ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹஷேம் சபிதீனும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பலிவாங்கும் விதமாக இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் நான்கு பேர் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் அமைந்துள்ள பால்பெக் நகரில் உள்ள மக்கள் அனைவரையும் வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே லெபனானின் சில பகுதிகளில் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், தற்போது லெபனானின் நகரப்பகுதிகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தவுள்ளதாக கூறியுள்ளது.
Also Read
-
மின்துறையை நடத்துவது எப்படி?: த.வெ.க அமைச்சருக்கு பேரவையில் பாடம் எடுத்த செந்தில் பாலாஜி, சிவசங்கர்!
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!
-
அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிக்காத சபாநாயகர்!
-
“Faceless People எனும் ஆவணப்படத்தைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!