உலகம்
இலங்கையின் முதல் கம்யூனிச அதிபராவாரா அநுர குமார திசநாயக்கே ? 51 % வாக்குகளை எட்டாவிட்டால் என்ன நடக்கும்?
இலங்கையின் எட்டாவது அதிபர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 38 பேர் போட்டியிட்டனர். எனினும் இதில் 3 பேர் மட்டுமே பிரதான வேட்பாளராக கருதப்பட்டனர்.
இலங்கையின் பாரம்பரிய கட்சிகளாக சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் பலவீனமடைந்துள்ள நிலையில், கட்சியைத் தாண்டி வேட்பாளர்களே இந்தத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி சார்பிலும், கடந்த அதிபர் தேர்தலில் 3 % வாக்குகளை பெற்ற அநுர குமார திசநாயக்கே இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சார்பாகவும் போட்டியிட்டனர். இவர்கள் மூன்று பேருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
இதில் கருத்து கணிப்புகளில் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த அநுர குமார திசநாயக்கே, பிரச்சாரம் ஆரம்பித்த நிலையில் முன்னிலை பெறத்தொடங்கினார். வழக்கமாக இலங்கை தேர்தலில் இனவாதம் முக்கிய இடம்பெறும் நிலையில், இந்தத் தேர்தலில் பொருளாதார தேக்கநிலையே முக்கிய இடம்பிடித்தது.
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் ஆரம்பத்திலிருந்தே தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசநாயக்கே முன்னிலை பெற்றுள்ளார். ஆரம்பத்தில் அதிக இடங்களில் அவர் முன்னிலை பெற்ற நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த சஜித் பிரேமதாசா கூடுதல் வாக்குதல் பெறத்தொடங்கியுள்ளார்.
தற்போதைய நிலையில் யாருக்கும் 51 % வாக்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டால், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வேட்பாளர்கள் தேர்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வாக்காளர்கள் செலுத்திய விருப்ப வாக்குகள் அடிப்படையில் இலங்கை அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தேர்தலில் வாக்காள்ர்கள் முதல் விருப்பம், இரண்டாவது விருப்பம், மூன்றாவது விருப்பம் என மொத்தம் 3 வேட்பாளர்களை தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது .
Also Read
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!