உலகம்
பதிலுக்கு பதில் : ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்... போர்க்களமாக மாறும் மத்திய கிழக்கு !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த போரில் ஹாமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆயுத உதவிகளை செய்து வருவதாக இஸ்ரேல் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதனைத் தொடர்ந்து சிரியா நாட்டில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறி அதற்கு பதிலடி தரப்படும் என்று ஈரான் சார்பில் கூறப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 99 சதவீதத்தை வானில் வைத்தே அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமனில் இருந்து நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று அதிகாலை ஈரானின் சில இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். எனினும் இது சிறிய அளவிலான தாக்குதல்தான் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் கூறியுள்ளன.
Also Read
-
Digital Store Value Pass... சென்னை மெட்ரோ ரயிலில் எளிதாக பயணிக்க இதை பயன்படுத்தலாம் : விவரம் உள்ளே !
-
வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியாவை பழிவாங்குகிறதா அமெரிக்கா ? - நாடாளுமன்றத்தில் திமுக MP ஆ.ராசா கேள்வி !
-
பஹல்காம் தாக்குதல் ஒன்றிய பாஜக அரசின் நிர்வாக தோல்வி - நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. ராசா குற்றச்சாட்டு!
-
“மோடியிடம் தைரியம் இல்லை... பாகிஸ்தானிடம் சரணடைந்து விட்டாரா?” : ராகுல் காந்தி கடும் தாக்கு!
-
“அமித்ஷாவின் பஹல்காம் கேலிக்கூத்து... மோடி எங்கே இருக்கிறார் ?” : மக்களவையில் ஆவேசமான திருச்சி சிவா MP !