உலகம்

"அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் தனியாக செல்லும்" - ஜோ பைடனுக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில காசா பகுதியில் கடைக்கோடி பகுதியில் இருக்கும் ரஃபா நகரில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. வடக்கு மற்றும் தெற்கு காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பல லட்சம் பாலஸ்தீனியர்கள் ரஃபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால், அங்கும் தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடேன், "13 லட்சம் பாலஸ்தீனா்கள் அடைக்கலம் புகுந்துள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுவே இஸ்ரேலின் எல்லை" என்று கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் பிரதமர் நெதென் யாகு, "ரஃபா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால், இஸ்ரேல் தனியாக செல்லும்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கள், "ரஃபா மீது தாக்குதல் நடத்துவதால் பெரும் அழிவு ஏற்படும். இது இஸ்ரேலை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தும் அபாயத்தையும் ஏற்படுத்தும். அதோடு இஸ்ரேலின் நீண்ட கால பாதுகாப்பு மற்றும் நிலைப்பாட்டை பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.

Also Read: உ.பி ஹோலி பண்டிகை : இஸ்லாமியர்கள் மீது தண்ணீர் ஊற்றி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கம் எழுப்பிய சிறார்கள் !