உலகம்

உச்சநீதிமன்ற தீர்ப்பால் மறுவாழ்வு பெற்ற டொனால்ட் டிரம்ப் : பரபரப்பான அமெரிக்க அரசியல்... நடந்தது என்ன ?

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார்.

ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கட்டிடத்தில் டிரம்ப்பின் ஆதரவாளர்களும், வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த சிலரும், நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த பாதுகாப்பு படையினர் அவர்களைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதுகாப்பு படையினரிடையே மோதலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட டிரம்ப்பின் ஆதரவாளர்கள், பாதுகாப்பு படையினரை தாக்கிவிட்டு நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து கலவரங்களில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த கலவரத்தை முன்னாள் அதிபர் டிரம்ப் தூண்டி விட்டதாக கொலராடோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிரம்பை குற்றவாளி என தீர்ப்பளித்தது. அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவோர் பதவியில் இருக்க முடியாது என்ற சட்டத்தின் மூலம் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதன்மைத் வேட்பாளராக போட்டியிடுவதிலிருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பின் காரணமாக டொனால்ட் டிரம்ப் இனி அதிபர் தேர்தலில் போட்டியிடமுடியாத சூழல் ஏற்பட்டது. இந்த தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட தடையில்லை என்று உத்தரவிட்டனர். மேலும், கொலராடோ நீதிமன்றத்தின் உத்தரவையும் ரத்து செய்தனர். இதன் காரணமாக டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வழிவகை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்தலில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.