உலகம்

1 மணி நேரம் முடங்கிய FaceBook, Instagram - மெட்டா நிறுவனத்துக்கு ரூ.23,127 கோடி இழப்பு... விவரம் என்ன ?

தற்போதுள்ள இந்த இணைய உலகில், நாம் அனைத்தையும் இணையவழியாகவே பெற முடிகிறது. தகவல் பரிமாற்றம் கூட நம்மால் இணைய வழியில் எளிமையாக செய்ய முடிகிறது. இது போன்ற செயலிகள் வெறும் தகவல் பரிமாற்றத்துடன் நின்றுவிடாமல், வீடியோ காலிங், போட்டோ வீடியோ பகிர்தல், வாய்ஸ் காலிங் வசதிகள் உள்ளிட்டவையும் பெற்றுள்ளது.

இது போன்ற செயலிகளை உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க் ஜூக்கர்பர்க்கால் தொடங்கப்பட்ட பேஸ்புக் நிறுவனம் தற்போது இந்த சமூகவலைதள உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பேஸ்புக் நிறுவனம் தனது சேவையோடு நிறுத்திகொள்ளாமல் வாட்ஸ்அப் போன்ற போட்டி நிறுவனங்களை வாங்கி மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. மேலும், தனக்கு கீழ் செயல்படும் பேஸ்புக், வாட்ஸ்அப் ,இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து மெட்டா என்ற தாய் நிறுவனத்தை உருவாக்கினார் மார்க் ஜூக்கர்பர்க்.

இந்த நிறுவனங்களில் இருந்து விளம்பரம் மூலமும், தகவல்களை பிற தளங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் மெட்டா நிறுவனம் பல மில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டி வருகிறது. இதன் காரணமாக இதன் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பர்க் உலகின் நான்காம் மிகப்பெரிய பணக்காரராக திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்கள் சுமார் 1 மணி நேரம் முடங்கியது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதன் பயனர்கள் அனைவரும் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். அதன்பின்னர் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது. எனினும் இதன் காரணமாக மெட்டா நிறுவனத்துக்கு சுமார் ரூ.23,127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனம் பங்குகள் சரிவை சந்தித்ததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் பெரியளவில் சேதாரம் இல்லாமல் உலகின் நான்காம் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை மார்க் ஜூக்கர்பர்க் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

Also Read: உலகிலேயே அரிதான நோய்... ‘குளித்தால் அலர்ஜி’... 22 வயது இளம்பெண்ணின் பரிதாப நிலை !