உலகம்

பேரழிவை நோக்கி பாகிஸ்தான் பொருளாதாரம் : வரலாறு காணாத அளவு உயர்ந்த கடன்... முழு விவரம் என்ன ?

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.

அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை

பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட காலியானதாக கூறப்பட்ட நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் மிக மோசமான பொருளாதார பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தை மையமாக கொண்ட தபாட்லாப் அமைப்பு அந்த நாடு குறித்த ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தானின் தனிநபர் கடன் 2011இல் 823 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் 2023இல் 1122 அமெரிக்க டாலர்கள் என 36 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், பாகிஸ்தானின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2011 இல் 1295 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் 2023இல் 1223 அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 2011 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு குழந்தைக்கு 70,778 பாகிஸ்தான் ரூபாய் அளவு கடன் இருந்தது என்றும் ஆனால் அதுவே 2023 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைக்கு 3, 21,341 பாகிஸ்தான் ரூபாய் அளவு கடன் அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் பாகிஸ்தான் மிக மோசமான பொருளாதார பேரழிவுக்கு ஆளாகக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Also Read: வடஇந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக மீண்டும் வதந்தி - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை !