உலகம்
பாலஸ்தீன கைதிகளை கொடுமைப்படுத்துகிறது இஸ்ரேல் : விடுவிக்கப்பட்ட பெண் கைதி பகிரங்க குற்றச்சாட்டு !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இதனிடையே கத்தார் நாட்டின் தலையீட்டின் பேரில் 4 நாட்கள் போர் நிறுத்த அறிவிப்பு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சார்பில் வெளியிடப்பட்டது. இந்த காலகட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் விடுவிப்பார்கள் என்றும், அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் இருக்கும் 150 பாலஸ்தீனர்களை விடுவிப்பதாக இஸ்ரேலும் ஒப்புக்கொண்டனர்.
பின்னர் முதற்கட்டமாக ஹமாஸ் தான் பிடித்துவைத்திருந்த 24 பிணையக் கைதிகளை விடுவித்தது. அதேபோல இஸ்ரேல் தனது நாட்டு சிறையில் இருந்த 39 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுதலை செய்துள்ளது. இன்றும் ஹமாஸ் 17 பணயக்கைதிகளை விடுவிக்க, பதிலுக்கு இஸ்ரேல் 39 பாலத்தீனக் கைதிகளை விடுவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பாலஸ்தீன் திரும்பிய அவர்களை அங்குள்ள பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனிடையே இஸ்ரேல் சிறைகளில் வாடும் பாலஸ்தீன கைதிகளில் சிலரை இஸ்ரேல் அதிகாரிகள் கொடுமை படுத்தியதாக விடுவிக்கப்பட்ட பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேலால் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்ட பெண் கைதியான சாரா அல்-சுவைஸா, "இஸ்ரேல் சிறைகளில் வாடும் பாலஸ்தீன கைதிகளில் சிலர் ‘பெப்பர் ஸ்ப்ரே’ எனப்படும் மிளகாய்ப் பொடி ஸ்ப்ரே அடித்து துன்புறுத்தப்பட்டனர். பாலத்தீனக் கைதிகளை இஸ்ரேல் அதிகாரிகள் இருட்டு அறைகளில் அடைத்து கொடுமைப்படுத்தினர்"என்று கூறியுள்ளார்.
அதே போல, ஹமாஸ் அமைப்பு தான் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளை கொடுமைப்படுத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட 84 வயதான எல்மா அவ்ராம் என்ற பெண்ணுக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஹமாஸ் அளிக்கவில்லை என்றும், இதனால் அவர் உயிர் ஆபத்தில் இருப்பதாகவும் இஸ்ரேல் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்