உலகம்

”இனி விசா இல்லாமல் இலங்கை செல்லலாம்” : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை - முழு விவரம் என்ன ?

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்தது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இலங்கை மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தனர்.இதனால் அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபச்சே மற்றும் அவரின் மஹிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை விலக வேண்டும் என வலியுறுத்தி ஆவேசத்துடன் இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் அதிபர் மாளிகையையும் மக்கள் கைப்பற்றினர்.

இதனை அடுத்து கோத்தபய ராஜபச்சே, மஹிந்த ராஜபக்சே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர் புதிய அதிபராக ரணில்விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். இருப்பினும் இன்னும் இலங்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை. தற்போது இலங்கையின் நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், அதற்கு இந்தியா அந்த நாட்டுக்கு செய்த பொருளாதார உதவி முக்கிய காரணமாக அமைந்தது. உணவு, எரிபொருள் போன்ற முக்கிய பொருள்களை இந்தியா இலங்கைக்கு அனுப்பி அந்நாட்டு மக்களுக்கு உதவியது.

இதுதவிர தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்டங்களாக உணவு போன்ற அத்தியாவசிய பொருள்களை இலங்கைக்கு அனுப்பி உதவினார். இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் இந்த உதவிக்கு இலங்கை மக்கள் நன்றி தெரிவித்த சமூகவலைத்தள பதிவுகள் இணையத்தில் வைரலாகின.

இத்தனைய உதவிகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. அதே நேரம் சுற்றுலாவே நாட்டின் வருமானத்தின் முக்கிய பங்காக விளங்கும் நிலையில், சுற்றுலை பயணிகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அந்த அரசு எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் நாட்டுக்குள் வரலாம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி, இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு விசா தேவையில்லை என்ற தீர்மானத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், அதன்பின்னர் இது குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் இது நீட்டிக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.

Also Read: வலுவடையும் 'INDIA' கூட்டணி.. சிதையும் பாஜக கூட்டணி.. NDA கூட்டணியில் இருந்து விலகிய பவன் கல்யாண் கட்சி!